பீகார் சட்டசபை தேர்தல்: நெருங்கிய போட்டியெல்லாம் இல்லை, பாஜகவுக்கு படுதோல்வி-நியூஸ் எக்ஸ் டிவி
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 95 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்று நியூஸ் எக்ஸ் டிவி - சிஎன்எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான கூட்டணி 135 இடங்களைக் கைப்பற்றி பீகாரில் ஆட்சியமைக்கும் என்று அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் 5 கட்டமாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 12ம்தேதி நடந்தது. அன்று 49 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.
தொடர்ந்து 16ம்தேதி 32 தொகுதிகளுக்கும், 28ம்தேதி 50 தொகுதிகளுக்கும், நவம்பர் 1ம்தேதி 55 தொகுதிகளுக்கும் நடைபெற்றது. 5வது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இன்று மட்டும் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பீகாரில் 15 ஆண்டு காலம் லாலு பிரசாத் யாதவ் ஆட்சி நடைபெற்றது. இதற்குப் பின்னர் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளம் இருமுறையும் பாஜக உடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதை அடுத்து பீகாரில் பாஜக - கடந்த ஆண்டு இந்த கூட்டணி முறிந்தது.
லோக்சபா தேர்தலை பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் தனித்தனியாக சந்தித்தன. இதில் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது. தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளது.
பாஜக தலைமையில் தனி அணி தேர்தலை சந்திக்கிறது. பாஜகவிற்கு ஆதரவாக பிரதமர் மோடி பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்தார். பீகார் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும். மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்கு முன்பு பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.
5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் தற்போது பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதில் நியூஸ் எக்ஸ் டிவி - சிஎன்எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், தேசிய ஜனநாயக கூட்டணி 95 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்றும் ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான கூட்டணி 135 இடங்களைக் கைப்பற்றி பீகாரில் ஆட்சியமைக்கும் என்றும் மற்றவை 18 இடங்களை வெல்லும் என்றும் தெரிவித்துள்ளது.
பீகாரில் இரண்டு கூட்டணிகளுக்கும் இடையே மிக நெருக்கமான கடும் போட்டி இருக்கும் என்று பிற கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில் நியூஸ் எக்ஸ் டிவியின் கருத்துக்கணிப்பு பாஜக படுதோல்வியை சந்திக்கும் என்று தெரிவித்துள்ளது.