பீகார்: அமைதியாக நடந்த 2வது கட்ட சட்டசபை தேர்தல் - 55% வாக்குகள் பதிவு!
பாட்னா: பீகார் சட்டசபைக்கான 2-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 55% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் தேர்தல் நடைபெற்றாலும் அமைதியாகவே நடந்து முடிவடைந்துள்ளது.
பீகார் சட்டசபைக்கு 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், ஆளும் ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான கூட்டணியும் தீவிரம்காட்டி வருகின்றன. 243 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சட்டசபையில், முதல் கட்டமாக 49 தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து கைமர், ரோத்தாஸ், அர்வால், ஜெகனாபாத், அவுரங்காபாத் மற்றும் கயா ஆகிய 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 32 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளில் 32 பெண்கள் உள்பட 456 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இவர்களின் தலைவிதியை 86 லட்சத்து 13 ஆயிரத்து 870 வாக்காளர்கள் பங்கேற்றனர். இன்றைய வாக்குப்பதிவுக்காக இந்த மாவட்டங்களில் 9 ஆயிரத்து 119 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இன்றைய தேர்தலில் முன்னாள் முதல்வரும், இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சித் தலைவருமான ஜித்தன்ராம் மஞ்சி (இமாம்கஞ்ச் தனித்தொகுதி), பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிரேம் குமார் (கயாநகர்), முன்னாள் மாநில தலைவர் கோபால் நாராயண் சிங் (நபிநகர்) உள்ளிட்ட தலைவர்கள் எதிர்கொண்டனர்.
இமாம்கஞ்ச் தொகுதியில் ஜித்தன்ராம் மஞ்சியை எதிர்த்து தற்போதைய சட்டமன்ற சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரி (ஐக்கிய ஜனதாதளம்) மோதினார். இவர் இந்த தொகுதியில் இருந்து 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால், ஜித்தன்ராம் மஞ்சிக்கு பெரும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த 32 தொகுதிகளும் பெரும்பாலும் ஐக்கிய ஜனதாதளம்-ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சிகளின் வசமே தற்போது உள்ளன. கடந்த 2010-ம் ஆண்டு நடந்த தேர்தலில், 19 தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளமும், 2 தொகுதிகளில் ராஷ்ட்ரீய ஜனதாதளமும் வெற்றி பெற்றிருந்தன. பா.ஜ.க. 10 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது.
FLASH: Overall polling percentage of 55% recorded in second phase of #Biharpolls
— ANI (@ANI_news) October 16, 2015
தற்போதும் ஐக்கிய ஜனதாதள கூட்டணி சார்பில் தலா 13 தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதாதள வேட்பாளர்கள் நிற்கின்றனர். மீதமுள்ள 6 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொறுத்தவரை, 16 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த 6 மாவட்டங்களும் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள்.
அதனால், இன்றைய வாக்குப்பதிவை அமைதியாக நடத்தி முடிக்க கூடுதல் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மாநில போலீசாருடன் இணைந்து 993 கம்பெனி துணை ராணுவத்தினர் களமிறக்கப்பட்டு உள்ளனர். மாவோயிஸ்டு அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட சில தொகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் 11 தொகுதிகளில் 3 மணி வரையும் 12 தொகுதிகளில் 4 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
எஞ்சிய 9 தொகுதிகளில் மட்டுமே 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
55% வாக்குகள் பதிவு
முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 57% வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்றைய 2வது கட்ட வாக்குப் பதிவில் முற்பகல் 11 மணிவரை 30% வாக்குகள்; 12 மணியளவில் 36.27%; பகல் 2 மணிவரை 47% வாக்குகள் பதிவாகி இருந்தன.
மாலையில் மொத்தமாக 55% வாக்குகள் பதிவாகி இருந்ததாக அறிவிக்கப்பட்டது.