லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளமும் நிதிஷுன் ஐக்கிய ஜனதா தளமும் ஒன்றாகிறது!
பாட்னா: பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளமும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் ஒரே கட்சியாக இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கால்நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக எதிரும் புதிருமான இருந்தவர்கள் நிதிஷ்குமாரும் லாலு பிரசாத் யாதவும்... கடந்த லோக்சபா தேர்தலில் பீகாரில் பாரதிய ஜனதா கட்சி விஸ்வரூப வெற்றியைப் பெற்றதும் தங்களது அரசியல் காலம் அழிந்து போய்விடும் என இருவரும் ஆடிப் போயினர்...
இதனால் பகைமையை மறந்து கை கோர்த்தனர்.. நிதிஷ்குமார் அரசுக்கான ஆதரவை பா.ஜ.க. விலக்கிய போது தாங்கிப் பிடித்தது லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம். தற்போதைய சட்டசபை தேர்தலிலும் இரு கட்சிகளும் இணைந்தே போட்டியிடுகின்றன.
நவ.8-ல் தேர்தல்
பீகார் சட்டசபைக்கு 4 கட்டமாக தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் நாளை 5வது கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தல் முடிவுகள் நவம்பர் 8-ந் தேதி வெளியாக உள்ளன.
தேசிய அரசியலில் லாலு
சட்டசபை தேர்தலில் லாலு-நிதிஷ் கட்சிகளின் கூட்டணி வென்றால் கூட்டணி அரசு அமையும். தோல்வியைத் தழுவினாலும் இரு கட்சிகளும் தொடர்ந்து பாரதிய ஜனதாவை எதிர்ப்பதில் கை கோர்த்து செயல்படும்.
இந்த நிலையில் தேசிய அரசியலில் லாலு கவனம் செலுத்த விரும்புவதாகவும் பீகார் அரசியலில் மகன்களை களமிறக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய தேர்தலில் லாலுவின் 2 மகன்கள் போட்டியிடுகின்றனர்.
ஒரே கட்சியாக...
மேலும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா கட்சி தொண்டர்களிடையேயும் பகைமை மறந்து 'நண்பேன்டா' சகாக்களாக வலம் வருகின்றனர்.. இதனால் இந்த இரு கட்சிகளும் ஒன்றாக ஒரே கட்சியாக இணைந்தால் பாரதிய ஜனதாவை வலுவாக எதிர்க்க முடியும் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது.
இதற்கேற்ப ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், ஐக்கிய ஜனதா தளத் தலைவர்களுடன் இரு கட்சிகளையும் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளையும் தீவிரமாக நடத்தி வருகின்றனர். இருதரப்பும் சாதகமான சூழ்நிலையை வெளிப்படுத்தி வருவதால் தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்தாலும் இரண்டும் ஒரே கட்சியாக இணைவது உறுதி என்றே தெரிகிறது.