பூரண மதுவிலக்கு: போதைக்காக சோப்பை சாப்பிட்ட நபர், ஞாபக மறதியால் அல்லாடும் 'குடி'மகன்கள்
பாட்னா: பீகாரில் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்துள்ளதால் பலருக்கு கை, கால் உதறல் ஏற்பட்டுள்ளது. ஒருவர் போதைக்காக சோப்பை சாப்பிட்டுள்ளார்.
பீகாரில் ஆட்சி செய்யும் நிதிஷ் குமார் அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளது. பூரண மதுவிலக்கு கடந்த செவ்வாய்க்கிழமை முதலில் அமலில் உள்ளதால் மது கிடைக்காமல் 'குடி'மகன்கள் அல்லாடுகிறார்கள்.
மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு மது குடிக்காததால் கை, கால் உதறல் ஏற்பட்டுள்ளது. பலருக்கு ஞாபக மறதி ஏற்பட்டு தனது குடும்பத்தாரையே அடையாளம் தெரியவில்லை. ஒருவர் போதைக்காக சோப்புகளை சாப்பிட்டுள்ளார்.
மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்காக மாநிலத்தில் மறுவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று வரை மட்டும் 749 பேர் அந்த மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மது விலக்கு அமலுக்கு வரும் முன்பு தினமும் 600 முதல் 1200 மில்லி நாட்டுச்சரக்கு குடித்து வந்த நபருக்கு தற்போது அவரது குடும்பத்தாரையே அடையாளம் காண முடியவில்லை. அவரால் ஒழுங்காக நடக்க முடியவில்லை. மது இல்லாமல் அவரால் எதையும் செய்ய முடியவில்லை. சிலர் போதைக்காக பேப்பர்கள், வலி நிவாரணிகளை அதிக அளவில் சாப்பிட்டுள்ளனர்.
குடிப்பழக்கம் உள்ள ஒரு சிறுவன் மது கிடைக்காததால் கையில் கிடைப்பதை எல்லாம் வாயில் போட்டுவிடுகிறார். மிளகாயைக் கூட அவர் விட்டுவைக்கவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.