மாணவிக்கு மதிய உணவு மறுப்பு: விளக்கம் கேட்ட தந்தையை கொன்ற முதல்வர், ஆசிரியர்கள்
பாட்னா: பீகாரில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் தனது மகளுக்கு ஏன் உணவளிக்கவில்லை என்று கேட்ட தந்தையை ஆசிரியர்கள், முதல்வர் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள நர்பத்கஞ்ச் கிராமத்தில் துவக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. நர்பத்கஞ்சை சேர்ந்த முகமது சாகிர் என்பவரின் மகள் அந்த பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளியில் சாகிரின் மகளுக்கு மதிய உணவுத் திட்டத்தின்கீழ் உணவு அளிக்கவில்லை. இதையடுத்து சிறுமி இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார். உடனே சாகிர் பள்ளிக்கு சென்று தனது மகளுக்கு ஏன் உணவு அளிக்கவில்லை என்று கேட்டுள்ளார்.
அதற்கு பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து சாகிரை அடித்து நொறுக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சாகிரை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
அடிவாங்கிய சாகிர் இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.