பீகாரில் பஞ்சாயத்து.. இந்துத்துவா அமைப்புகளுக்கு நிதிஷ்குமார் குறி- ஆர்.எஸ்.எஸ். கொந்தளிப்பு
பாட்னா: பீகாரில் 19 இந்துத்துவா இயக்கங்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்துவதற்கு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணி அரசு முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் 18 சார்பு அமைப்புகள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வரும் கடிதம் ஒன்று வெளியானது.
இது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் கவனத்துக்கும் கொண்டு செல்ல உள்ளனர்.
பாஜக கூட்டணி அரசுக்கு கண்டனம்
இது தொடர்பாக மூத்த ஆர்.எஸ்.எஸ்.தலைவர் அஜித்குமார் உள்ளிட்டோர் கூறியதாவது: பீகார் அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. இது முதல்வர் நிதிஷ்குமாரின் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது.
எங்ககிட்ட கேட்கலாமே..
தேசப்பற்றுள்ள ஒரு இயக்கம் குறித்த தகவல்களை ஏன் போலீசாரை வைத்து சேகரிக்க வேண்டும்? எங்களை நேரடியாக கேட்டால் நாங்களே கொடுத்துவிடுவோமே.. மதராசாக்கள், மாவோயிஸ்ட் அமைப்புகள், இடதுசாரி இயக்கங்கள் மீது இப்படியன நடவடிக்கை இல்லையே ஏன்?
ராஜ்நாத்திடம் முறையீடு
இதைப்பற்றி நாங்கள் நாக்பூர் மேலிடத்துக்கு தெரிவித்திருக்கிறோம். தேவைப்பட்டால் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் முறையிடுவோம். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல. இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கூறியுள்ளனர்.
இந்துத்துவா இயக்கங்கள்
ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், ஹிந்து ஜாக்ரன் சமிதி, துர்கா வாஹினி, சுதேசி ஜாக்ரன் மஞ்ச், பாரதிய கிஷான் சங் உள்ளிட்ட அமைப்புகள் பற்றிய விவரங்களைத்தான் பீகார் போலீசார் சேகரித்துள்ளனர். இந்த விவகாரம் அம்மாநில சட்டசபையில் எதிரொலித்தது.