பீகாரில் மீண்டும் ஜெயித்தால் மதுவிலக்கு: பாஜகவை அட்டாக் செய்ய நிதிஷ் அதிரடி
பாட்னா: பீகாரில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் உறுதி அளித்துள்ளார். அதோடு பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்படும் என்றும் எதிர்கட்சியான பாஜகவை அட்டாக் செய்யும் வகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் நிதிஷ்குமார்.
பூரண மதுவிலக்கு கோஷம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல பீகாரிலும் பற்றி எரிகிறது. மதுவிலக்கு கோஷத்தை எதிர்கட்சி கையில் எடுக்கவே முதல்வர் நிதிஷ்குமாரோ எதிர்கட்சிகளை கவிழ்க்கும் வகையில் வெற்றி பெற்றால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் களத்தை எதிர்கொள்ள இருக்கிறது.
பீகாரில் ஆட்சியை எப்படியும் கைப்பற்றிவிடுவது என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி. அதற்கான பணியிலும் இறங்கிவிட்டது. இதனால் அங்கு சட்டசபைத் தேர்தல் களமானது சூடுபிடித்து உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி பிரசாரத்தில் பேசிய மோடி, பீகாரில் அரசியல் மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் என்றார்.
பீகாருக்கு நிதி உதவி
பீகார் மாநிலம் அர்ராக் மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி, பீகார் மாநிலத்திற்கு ரூ. 1.25 லட்சம் கோடி நிதிஉதவி வழங்கப்படும் என்றும் மாநிலத்தில் பாரதீய ஜனதாவை ஆட்சியில் அமர்த்தினால், மாநிலத்தை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வோம் என்றும் வாக்குறுதி அளித்து உள்ளார்.
நிதிஷ்குமார் வாக்குறுதி
தற்போது மக்களின் வாக்குகளைக் கவரும் வகையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அதிரடியாக ஒரு வாக்குறுதி அளித்துள்ளார். அதாவது பீகார் பொதுத் தேர்தலில் நான் மீண்டும் முதல்வரானால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்பதுதான் நிதிஷ் குமார் அளித்துள்ள வாக்குறுதி.
பெண்கள் முன்னேற்றம்
பெண்கள் முன்னேற்றத்திற்காக பல முக்கிய திட்டங்களை அமல்படுத்தப்போவதாகவும் கூறியுள்ள நிதிஷ், மாநிலம் முழுவதும் உள்ள 1.5 கோடி சுயஉதவிக்குழு பெண்களை ஒருங்கிணைக்கவும் முடிவு செய்துள்ளார். இதன்மூலம் பெண்களின் வாக்குகளை கவரவேண்டும் என்பது நிதிஷ்குமாரின் திட்டம்.
தமிழகத்தில் மதுவிலக்கு
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையினை எதிர்கட்சியினர் முன்வைத்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதியோ, அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று பகிரங்கமாக அறிக்கையே வெளியிட்டுள்ளார். பாமகவின் முக்கிய கோஷமே மதுவிலக்குதான். மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினரும் மதுவிலக்கை முன்வைத்தே போராட்டங்களை நடத்தி வருகின்றன. 2016ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் பூரண மதுவிலக்கு பற்றிய பிரச்சாரமே முன்நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முதல்வர் ஜெயலலிதாவும் நிதிஷ் குமாரைப்போல மதுவிலக்கு பற்றி வாக்குறுதி மட்டும் அளிப்பாரா அல்லது தேர்தலுக்கு முன்பாக மதுவிலக்கை அமல்படுத்துவாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.