பீகார் சட்டசபை தேர்தல்: நக்சல்கள் உட்பட 900 பேர் கைது... மாநிலம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு!!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நக்சலைட்டுகள், கிரிமினல்கள் என சந்தேகிக்கப்படுவோர் 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தேர்தலை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பீகாரில் அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் நவம்பர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இத்தேர்தலின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வகையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் நக்சலைட்டுகள், கிரிமினல்கள் என சந்தேகிக்கப்படுவோர் 900 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நக்சல் பகுதிகளில் 15 என்கவுண்ட்டர் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
தேர்தல்களை சீர்குலைக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த 105 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 5 கையெறி குண்டுகள் உட்பட 40 சட்டவிரோத ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பீகாரின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நக்சல்கள் தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். குறிப்பாக ஜமுய், ஜெகனாபாத், அவுரங்காபாத் மற்றும் கயா உள்ளிட்ட நக்சல்கள் ஆதிக்கம் உள்ள மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுஷில்குமார் மோடி மீது வழக்கு
இதனிடையே பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரான முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.