பீகார் சட்டசபை தேர்தல் களத்தில் குதித்த அமித்ஷா... தேர்தல் முடியும் வரை முகாம்!!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் பாரதிய ஜனதாவினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அக்கட்சித் தலைவர் அமித்ஷா தற்போது அம்மாநிலத்தில் முகாமிட்டுள்ளார். தேர்தல் முடியும் வரை தொடர்ந்து பீகாரிலேயே அவர் தங்கியிருக்கவும் திட்டமிட்டுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் களத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷாவும் குதித்திருக்கிறார். பா.ஜ.க.வில் உள்ள 'உள்ளடி வேலைகளை' ஒழுங்குபடுத்தி தேர்தலில் உருப்படியான வெற்றியைப் பெற வேண்டும் என்ற முனைப்பில்தான் அமித்ஷா முகாமிட்டிருக்கிறார் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
அண்மையில் பா.ஜ.க. எம்.பி. ஆர்.கே.சிங், கிரிமினல்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு கட்சி சீட்டுகளை விற்பனை செய்கிறது என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதான் பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. இதனால் சீட் கிடைக்காத பலரும் அதிருப்தி வேட்பாளர்களாக பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக களம் இறங்க உள்ளனர். இவர்களை நேரில் அழைத்து சமாதானம் செய்வது என்பது அமித்ஷாவின் முக்கிய பணியாக இருக்கும் என கூறபடுகிறது.
அமித்ஷா நவம்பர் மாதம் வரை பீகாரிலேயே முகாமிட இருப்பதால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டார்.
பீகாரின் பெகுசராயில் இன்று கட்சி தொண்டர்களை சந்திக்கும் அமித்ஷா பாட்னாவில் அக்டோபர் 3-ந் தேதி கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். இப்படி தொடர்ச்சியாக கட்சி தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகள் மூலமாக அதிருப்தி வேட்பாளர்களை சமாதானப்படுத்துவதில் அவர் முக்கிய கவனம் செலுத்துவார் எனவும் பல தொகுதிகளில் இந்த அதிருப்தி வேட்பாளர்களால் வெற்றி வாய்ப்பு பாழாகிவிடக் கூடாது எனவும் அவர் கருதுவதாகவும் பா.ஜ.க. வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் பீகார் பா.ஜ.க.வில் பல தலைவர்கள் இருப்பதால் ஆளுக்கொரு திசையில் பிரசாரம் செய்வதை ஒழுங்குபடுத்தும் வகையில் அனைத்து பிரசார உத்திகளையும் தம் கட்டுப்பாட்டில் வைத்து கட்டளை பிறப்பிக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாலும் நவம்பர் மாதம் வரை பீகாரில் முகாமிட முடிவு செய்துள்ளார் என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள்.