பீகார் தேர்தல்: பா.ஜ.க. 160; எல்.ஜே.பி. 40; ஆர்.எல்.எஸ்.பி. 23; ஹெச்.ஏ.எம் 20 தொகுதிகளில் போட்டி!!
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 160 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர் பாஸ்வானின் லோக் ஜனசக்தி 40; மத்திய அமைச்சர் உபேந்திர குஷாவாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி 23; முன்னாள் முதல்வர் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 20 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் அமித்ஷா அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் 243 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது. நவம்பர் 8-ந் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் தலா 100 தொகுதிகளிலும் காங்கிரஸ் 43 தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக நிதிஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பீகாரில் எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றிவிடுவது என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மத்திய அமைச்சர் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, மத்திய அமைச்சர் உபேந்திரா குஷாவாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, முன்னாள் முதல்வர் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளிடையேயான தொகுதிப் பங்கீடு குறித்து பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
டெல்லியில் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தலைவர் மாஞ்சி இன்று பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார். இதன்பிறகு பா.ஜ.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
'Vikas' is NDA's main agenda & we are committed to it. pic.twitter.com/ZiL5GPTj3A
— Amit Shah (@AmitShahOffice) September 14, 2015
இத்தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில்
பாரதிய ஜனதா கட்சி - 160
ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி - 40
உபேந்திரா குஷாவாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி -23
மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா- 20 தொகுதிகளில் போட்டியிடும் என உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் காட்டாட்சி நடைபெறுகிறது. நிதிஷ்குமார் அமைத்துள்ளது ஊழல் கூட்டணி. பீகார் மாநில மக்கள் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு வாய்ப்பளிப்பார்கள்.
பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
எங்கள் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் எந்த ஒரு சிக்கலும் இல்லை. எங்கள் கூட்டணியின் முதல்வர் யார் என்பதை தேர்தலுக்குப் பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூடி முடிவு செய்வார்கள்.
பீகார் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரசாரம் மேற்கொள்வோம். அவர் கூட்டணியில் உள்ள 4 கட்சிகளுக்கும் பிரசாரம் செய்வார்.
பீகாரில் தேர்தலில் நாங்கள் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையை நிச்சயம் பெறுவோம்.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.
இந்த சந்திப்பின் போது பா.ஜ.க. கூட்டணி கட்சித் தலைவர்களான ராம்விலாஸ் பாஸ்வான், உபேந்திர குஷாவா, மாஞ்சி ஆகியோரும் உடன் இருந்தனர்.