பீகாரில் 3 இடங்களில் வெற்றியைப் பெற்ற மாஜி "நக்சலைட்" கட்சி சி.பி.ஐ(மா.லெ) (லிபரேசன்)
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் மாஜி நக்சல்கள் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் (மா.லெ) (லிபரேசன்) 3 இடங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி 1967ல் உருவானது. மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து 1969-ல் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) என ஒரு தலைமறைவு நக்சலைட் இயக்கமாக மஜூம்தார் தலைமையில் உருவானது.
பின்னர் இதில் பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் (மா.லெ.) (லிபரேசன்) உருவானது. 1975ல் வினோத் மிஸ்ரா இதன் பொதுச்செயலராக பொறுப்பு வருகிறார்..
1980களில் ஐ.பி.எப். (Indian Peoples Front) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட இந்த கட்சி தொடங்கியது. பின்னர் ஐ.பி.எப். கலைக்கப்பட்டு வெவ்வேறு பெயர்களில் பல தேர்தல்களில் போட்டியிட்டு வந்தது இந்த கட்சி.
தற்போதைய பீகார் சட்டசபை தேர்தலில் இருக்கிற அத்தனை "இடதுசாரி" கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தன.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்(மா-லெ) (லிபரேசன்), பார்வார்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, எஸ்.யூ.சி.ஐ ஆகிய 6 கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.
இதில் மாஜி நக்சலைட் கட்சியான சி.பி.ஐ(மா.லெ) (லிபரேசன்) கட்சியின் வேட்பாளர்கள் பலர் சிறைகளில் இருந்தபடி போட்டியிட்டனர். இந்த கட்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் 3 இடங்களில் அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 1.5% வாக்குகளை இந்த மாஜி நக்சலைட் கட்சி பெற்றுள்ளது.
பிரதான இடதுசாரி அரசியல் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் படுதோல்வியைத்தான் சந்தித்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1.4%; மார்க்சிஸ்ட் கட்சி 0.6% வாக்குகளைத்தான் பெற்றிருக்கின்றன.
இருப்பினும், ஒரு வலுவான இடதுசாரிகள் கூட்டணிக்காக ஒரு தொடக்கமாக இதை கருதுவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கூறுகிறார். இதே பார்முலாவை மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் பின்பற்றவும் வாய்ப்பிருக்கிறது.
ஆனால் இடதுசாரிகளின் பிரதான எதிரிகளாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. இருக்கும் போது அவர்களை மிக வலுவாக எதிர்க்கும் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளத்துடன் மல்லுக் கட்டியது என்பது பாரதிய ஜனதாவுக்கு எதிரான வாக்குகளை சிதறச் செய்துவிட்டது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.