பீகார் தேர்தலில் ஓட்டுப்போட வந்தவர்களை விரட்டிய குரங்கு... பெண்ணை கடித்து குதறியது!
பாட்னா: பீகாரில் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த வாக்காளர்களை குரங்கு ஒன்று விரட்டி விரட்டி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் சட்டசபைத் தேர்தலில் 3வது கட்டமாக 50 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 11 மணிவரையில் 20 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
பக்தியார்பூரில் உள்ள ஓர் வாக்குச் சாவடியில் வாக்களிக்க பொது மக்கள் ஆர்வமுடன் வந்தன்ர் பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்த போது, வரிசையில் நிற்கமுடியாத ஒரு பெண்மணி கீழே அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று வரிசையில் நின்றவர்களை பயமுறுத்தி கொண்டு இருந்தது. திடீர் என அந்த குரங்கு அமர்ந்து இருந்த பெண்மணி மீது பாய்ந்து அவரது கையை கடித்தது.
குரங்கு கடித்த உடன் பெண்ணில் கையில் இருந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவர் வலியால் துடித்தார். உடனடியாக அருகே இருந்த ஒரு வாலிபர் அந்த பெண்ணை தூக்கி கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார்.
அதைத் தொடர்ந்து 6 பேரை கடித்து விட்டுதான் அங்கிருந்து ஓடிப்போனது அந்தக் குரங்கு வாக்களிக்க வந்தவர்களை குரங்கு ஒன்று கடித்த சம்பவம் வாக்குச்சாவடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.