பீகார் தேர்தல்: லாலுவுக்கு எதிராக மந்திரவாதியிடம் பூஜை- முதல்வர் நிதீஷ்குமாரை கலங்கடிக்கும் வீடியோ
பாட்னா: பீகார் மாநிலத்தில் இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்து மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் மந்திரவாதி ஒருவருடன் பூஜையில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது.
அமைச்சர்கள் லஞ்சம் வாங்கிய வீடியோக்கள், மந்திரவாதி வீடியோ என நிதிஷ் குமாருக்கு எதிராக பாஜகவினர் அடுத்தடுத்து வீசிவரும் வீடியோ குண்டுகளால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது பீகார் மாநில தேர்தல்.
பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் லாலுவின் ராஸ்டிரிய ஜனதா தளம், நிதிஷின் ஒருங்கிணைந்த ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகியவை இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, உபேந்திர குஷாவாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, மாஞ்சியின் அவாமி மோர்ச்சா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மந்திரவாதிவாதி வீடியோ
இரண்டு கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில் வரும் 29ம் தேதி 3வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய இணை அமைச்சருமான கிரிராஜ் சிங் இணையதளங்களில் ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோ இணையங்களில் வைரல் ஆகியுள்ளது.
மந்திரவாதியுடன் நிதிஷ்குமார்
வீடியோ பதிவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அருகில் மந்திரவாதி ஒருவர் இருக்கிறார். நிதிஷ் கட்சியின் மோகமா தொகுதி வேட்பாளர் நீரஜ் குமாரும் அருகில் அமர்ந்துள்ளார். பின்னர் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக மந்திரவாதி சில மந்திரங்களை சொல்கிறார். வீடியோவில் இருவரும் பேசிக்கொண்டாலும் எதையும் தெளிவாக கேட்க முடியவில்லை.
ஓம் லாலு ஸ்வாஹ…
இந்த பூஜையின்போது, நிதிஷ் குமாரின் பரம எதிரியாக இருந்து தற்போது அவருடன் கைகோத்துள்ள லாலு பிரசாத் யாதவுக்கு எதிராகவும் அந்த மந்திரவாதி சில மந்திரங்களை கூறி பூஜிப்பதாக சொல்லப்படுகிறது. அவ்வப்போது அந்த மந்திரவாதி லாலுபிரசாத் யாதவின் பெயரையும் சொல்கிறார்.
அசராத லாலு
நிதிஷின் கூட்டணியில் லாலு பிரசாத்துக்கு எதிராக மந்திரம் சொன்னதாக கிளம்பி இருக்கும் விவகாரம், தற்போது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய லாலு, "இந்த மந்திரவாதி தந்திரவாதி பற்றி எனக்கு எந்த பயமும் கிடையாது. நானே பெரிய மந்திரவாதிதான்'' என்றார். இந்த வீடியோ குறித்து நிதிஷ் குமாரோ, அவரது கட்சியின் மூத்த தலைவர்களோ இதுவரை கருத்து எதுவும் கூறவில்லை.
பரபரப்பு வீடியோக்கள்
பீகார் மாநில சுங்கவரித் துறை அமைச்சர் அவதேஷ் குஷ்வாஹா வர்த்தகர் ஒருவரிடம் இருந்து ரூ.4 லட்சம் லஞ்சம் பெற்றதாக ஒரு வீடியோ வெளியானதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், வர்த்தகர் ஒருவரிடம் இருந்து ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ சத்யதேவ் குஷ்வாஹா ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்றதாக வெளியாகியுள்ள வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லஞ்ச வீடியோவில் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் இந்த வீடியோவில், சத்யதேவ் அடையாளம் தெரியாத வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 1,000 ரூபாய் நோட்டுக் கட்டுகளை வாங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், அந்த வர்த்தகருக்கு உதவுவதாக உறுதியளிக்கிறார் சத்யதேவ், மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சிக்கு வரும்போது இன்னும் அதிகம் பணம் தர வேண்டும் என்று கேட்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
மோடி கிண்டல்
பீகாரில் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவதேஷ் குஷ்வாஹாவின் லஞ்ச வீடியோ, நேற்று முன்தினம் மந்திரவாதி ஒருவரிடம் முதல்வர் நிதீஷ்குமார் ஆசி பெற்ற வீடியோ, தற்போது இந்த புதிய லஞ்ச வீடியோ என்று அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்களால் ஐக்கிய ஜனதா தள அரசு ஆட்டம் கண்டுள்ளது. இந்த வீடியோக்களை வைத்துதான் பிரதான எதிர்கட்சியான பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. அம்மாநிலத்தில் மர்ஹவ்ராவில் தேர்தல் பிரச்சாரம் செய்த மோடி, மந்திரவாதி வீடியோவை குறிப்பிட்டு கிண்டலடித்தார்.
மந்திவாதியுடன் கூட்டணி
கிராண்ட் அலையன்ஸில் 3 கட்சிகள் இருப்பதாகவே நான் அறிவேன். அதாவது ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ். இப்போதுதான் கேள்விப்பட்டேன் 4வதாக ஒருவர் சேர்ந்துள்ளார் என்பதை, ஒரு மந்திரவாதி இணைந்துள்ளார். ஜனநாயகம் என்பது மந்திர தந்திரங்களால் நடைபெறுவதல்ல, மக்களை வைத்துத்தான் ஜனநாயகம் நடைபெறுகிறது
சுயநலக் கூட்டணி
ஜனநாயகத்துக்கு இவ்வாறு ஒருவர் தீங்கு செய்ய முடியுமா? இளைஞர்கள் வளர்ச்சிக்காக ஒரு தாந்திரீகர் என்ன செய்ய முடியும்? இனி லாலு தனது கட்சியை ராஷ்ட்ரிய ஜாது-தோனா தளம் என்றே பெயரிட வேண்டும் என்றார் மோடி. மாஹாகாத்பந்தன் (மகா கூட்டணி) எப்போதும் மகாஸ்வார்த்பந்தன் (மகா சுயநலக் கூட்டணி) ஆகவே உள்ளது என்றும் நிதிஷ் தலைமையிலான கூட்டணியை சாடியுள்ளார் மோடி.
எப்படியோ பீகார் தேர்தல் மக்களுக்கு வேடிக்கையாகவே இருக்கிறது.