ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பில் சேருமாறு பாகிஸ்தானில் இருந்து பீகார் மாணவருக்கு அழைப்பு
பபுவா: ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பில் சேருமாறு தனக்கு பாகிஸ்தானில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக பீகார் கல்லூரி மாணவர் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகேஷ்குமார். அந்த இளைஞர் தனது மொபைல் போனுக்கு பாகிஸ்தானில் இருந்து ஓர் அழைப்பு வந்ததாகவும், மறுமுனையில் பேசிய நபர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யில் சேருமாறு தன்னை அழைத்ததாகவும் போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
முதல் முறை அழைப்பு வந்தபோது போனை எடுக்கவில்லை. இரண்டாவது முறை எடுத்தபோது மறுமுனையில் பேசிய நபர், ஐ.எஸ்.ஐ. அமைப்பில் சேர்ந்தால் நிறைய பணம் தருவதாக கூறினார். அதனை நான் ஏற்கவில்லை என்றும் புகார் கொடுத்த முகேஷ் குமார் கூறியுள்ளார்.
இது குறித்து காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் ஹர்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.மாணவர் முகேஷ் குமார் துணிக்கடையில் பகுதி நேர வேலை பார்த்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.