லாலு மகன்.. புதுசா அமைச்சராகியிருக்காப்ல.. பயந்துட்டாப்ல.. போகப் போக பிக்கப் ஆயிருவாப்ல!
பாட்னா: நிதீஷ் குமார் அமைச்சரவையில் புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், பதவிப்பிரமானத்தின்போது பிரமாண வாசகத்தை தடுமாற்றத்தி்ல் தவறாகப் படித்ததால் ஆளுநர் அவரை மீண்டும் வாசிக்கச் சொன்னார்.
நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி இன்று பீகாரில் பதவியேற்றது. இந்த அமைச்சரவையில் சட்டசபையில் தனிப் பெரும் கட்சியாக விளங்கும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. லாலுவின் இரு மகன்களும் அமைச்சராக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டபோது லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் தடுமாறினார். பிரமாண வாசகத்தை அவர் தவறாகப் படித்தார். இதையடுத்து அவரை மீண்டும் படிக்குமாறு ஆளுநர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் மீண்டும் சரியாகப் படித்து சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டார் தேஜ்.
அதாவது எதிர்பார்ப்பு என்று பொருள் தரும் அபேக்ஷித் என்று கூறுவதற்குப் பதில் நிராகரிப்பு என்று பொருள் வரும் உபேக்ஷித் என்று கூறி விட்டார் தேஜ்.
முதல் நாளே "எதிர்பார்ப்பு" நிராகரிப்பா..!?