நம்பிக்கையில்லா தீர்மானம்: பிஜு ஜனதாதளம் வெளிநடப்பு.. சிவசேனா புறக்கணிப்பு.. பாஜகவுக்கு லாபம்
டெல்லி: நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் ஆரம்பத்திலேயே பிஜு ஜனதாதளம் வெளிநடப்பு செய்துள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் ஆரம்பித்ததுமே, அவையில் இருந்து பிஜு ஜனதாதளத்தின் 19 எம்.பிக்களும் வெளி நடப்பு செய்வதாக கூறி வெளியேறினர். அப்போது அவர்களை எதிர்த்து எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர்.
மாலை 6 மணிக்கு மேல் வாக்கெடுப்பு நடைபெறும்போது, பிஜு ஜனதாதளம் அதில் பங்கேற்கப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. இது பாஜகவிற்கே ஆதாயமாகும். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற முடியும் என்பது மட்டுமின்றி, வாக்கு வித்தியாசமும் அதிகரிக்கும் என்பதால் பாஜகவுக்கு இது நன்மைதான்.
பாமக உறுப்பினர் அன்புமணியும் வெளிநடப்பு செய்துள்ள நிலையில், அதிமுக விவாதத்தில் பங்கேற்கும் என தெரிகிறது. வாக்கெடுப்பு நேரத்தில் அதிமுக வெளிநடப்பு செய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல விவாதத்தில் சிவசேனா எம்.பிக்களும் பங்கேற்கவில்லை. அவர்கள் இன்று அவைக்கே வரவில்லை.