பி.எஸ்.எப் எல்லைப் பாதுகாப்பு படையின் முதல் பெண் அதிகாரி தனுஸ்ரீ - மகளிர் தினத்தில் இணைந்தார்!
குவாலியர்: இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு படையில் முதன்முறையாக பெண் அதிகாரி ஒருவர் மகளிர் தினமான நேற்று இணைந்து சாதனை புரிந்துள்ளார்.
எல்லைப் பாதுகாப்புப் படை எனப்படும் பி.எஸ்.எப் துறையில் முதல் பெண் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜஸ்தான் மாநிலம் பிக்னீரைச் சேர்ந்த தனுஸ்ரீ பரீக். இவர் தன்னுடைய 23 வயதிலேயே இந்த பெருமையைப் பெற்றுள்ளார்.
எல்லைப் பாதுகாப்புப் படையில் துணைக் கமாண்டர் அதிகாரியாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் தேர்வு செய்யப்பட்டார். எல்லைப் பாதுகாப்புப் படையில் அதிகாரியாக சேரும் முதல் பெண் இவர் ஆவார். அவர் தேர்வானபோது "என் மகள் பி.எஸ்.எப் அதிகாரியாக இருப்பதே எனக்கு பெருமை" என்று தனுஸ்ரீயின் தந்தை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் நகரில் உள்ள பி.எஸ்.எப் பயிற்சி அகாடமியில் தனுஸ்ரீ பரீக் நேற்று இணைந்தார். சர்வதேச மகளிர் தினத்தன்று அவர் பயிற்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கதாகும். இங்கு 52 வாரங்கள் பயிற்சி முடிந்த பிறகு துணைக் கமாண்டராக அவர் பொறுப்பேற்பார்.