சட்டீஸ்கர் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் 11 பேர் பலி: காங்கிரஸ் பந்த்
பிலாஸ்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் அரசு நடத்திய குடும்பக்கட்டுப்பாடு முகாமில் கலந்துகொண்டு பலியான பெண்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் தக்கட்பூரில் அரசு சார்பில் குடும்பக் கட்டுப்பாடு முகாம் திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 32 பேர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். மருத்துவர்களின் அலட்சியமே இந்த உயிரிழப்பிற்கு காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விசாரணைக்குழு
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த விசாரணைக் குழு ஒன்றை சட்டீஸ்கர் மாநில அரசு அமைத்துள்ளது. மேலும் இறந்தவர்கள் அனைவரின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், மருத்துவனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50000 வழங்கப்படும் என்று மாநில முதல்வர் ராமன் சிங் அறிவித்தார்.
4 பேர் சஸ்பெண்ட்
இந்த அறுவை சிகிச்சையை பொறுப்பேற்று நடத்திய மருத்துவர் ஆர். கே. குப்தா உள்ளிட்ட நான்கு சுகாதாரத்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். மேலும் அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யவும் முதல்வர் ராமன் சிங் உத்தரவிட்டார்.
மோடி உத்தரவு
இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று முதல்வர் ராமன் சிங்கை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பெண்களின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ஐ.நா. மக்கள் தொகை நிதிப்பிரிவின் துணை நிர்வாக இயக்குனர் கேட் கில்மோரும் தனது கவலையை தெரிவித்துள்ளார்.
பதவி விலக வலியுறுத்தல்
அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சரான அமர் அகர்வாலின் சொந்த தொகுதியில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதால், அவர் பதவி விலவேண்டும் என காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
காங்கிரஸ் பந்த்
இதற்கிடையே 11 பெண்கள் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரியும்,முதல்வர் ராமன் சிங் மற்றும் அமர் அகர்வால் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டீஸ்கரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் பாஜக அரசைக் கண்டித்து ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பார்வை இழப்பு
முன்னதாக கடந்த 2011 முதல் 2013 வரை சட்டீஸ்கர் மாநிலத்தில் அரசு நடத்திய கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை பெற்ற 44 பேர் பார்வை இழந்தனர். அதே போல 2012-ஆம் ஆண்டிலும் இந்த மாநிலத்தில் 4 பேருக்கு தவறான சிகிச்சை முறையால் பார்வை பறிபோனது குறிப்பிடத்தக்கது.