மோடி அமைச்சரவையின் 9 புதிய அமைச்சர்கள் இவர்கள்தான்!
மத்திய அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்ற 9 அமைச்சர்கள் குறித்த சுய விவரங்கள்.
டெல்லி: மத்திய அமைச்சரவையில் புதிதாக இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் அஸ்வின் குமார் செளபே, சத்யபால் சிங், ஷிவ் பிரதாப் சுக்லா,ராஜ்குமார் சிங், வீரேந்திர குமார்,ஹர்தீப் சிங் புரி,கஜேந்திர சிங் ஷெகவாத், அனந்தகுமார், அல்போன்ஸ் ஆகியோர் குறித்த சுய விவரங்கள்.
அஸ்வின் குமார் சௌபே- பீகார் மாநிலம் பக்ஸார் லோக்சபா தொகுதியின் உறுப்பினராவார். பாஜகவை சேர்ந்த இவர் பீகார் மாநிலத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்தவர். 16-ஆவது லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் அவர் பகல்பூர் தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்தார்.
சத்யபால் சிங்- இவர் மும்பை மாநகர முன்னாள் காவல் துறை ஆணையராக இருந்தவர். உத்தரப்பிரதேச மாநிலம் பகத்பட் லோக்சபா தொகுதியை சேர்ந்தவர்.
இவர் பாஜகவை சேர்ந்தவர்.
ஷிவ் பிரதாப் சுக்லா- உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு பாஜகவின் துணை தலைவராக இருந்தவர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைச்சராகவும் இருந்தார். முதல் முறையாக 10 மாவட்டங்களை இணைந்து அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். சிறைத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்தவர். அதேபோல் ஊரக வளர்ச்சி துறை திட்டங்களிலும் அவர் பல்வேறு நல்ல திட்டங்களை செய்து வைத்துள்ளார்.
ராஜ்குமார் சிங்- பீகாரை சேர்ந்த இவர் ஆர்.கே. சிங் என்றும் அழைக்கப்படுகிறார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். 1975-இல் ஐஏஎஸ் பயிற்சி முடித்த இவர் இந்தியாவின் முன்ளாள் உள்துறை செயலாளராக இருந்தவர். கடந்த 1990-இல் இவர் சமஸ்திபூர் மாவட்ட ஆட்சியராக இருந்த போது, அயோத்தியில் இருந்து குஜராத் மாநிலம் சோம்நாத்துக்கு யாத்திரை மேற்கொண்ட பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை கைது செய்தவர். இந்த கைதானது அப்போதைய லாலு பிரசாத் ஆட்சியின் உத்தரவின் பேரில் நடைபெற்றது. கடந்த 2013-இல் ஆர்கே சிங் பாஜகவில் இணைந்தார். பின்னர் ஆரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வீரேந்திர குமார்- மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் இவர்.இவர் 11,12, 13, 14-ஆவது லோக்சபாவில் உறுப்பினராக இருந்தார். இவர் 1996-2009 வரை ம.பி.யின் சாகர் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். தற்போது 15 மற்றும் 16-ஆவது லோக்சபாவின் உறுப்பினராகவும் உள்ளார். தற்போது திகம்கார் தொகுதியின் பாஜக உறுப்பினராவார். தொழில் துறையின் நிலைக்குழுவின் தலைவராவார்.
ஹர்தீப் சிங் புரி- பஞ்சாபை சேர்ந்த இவர் இந்திய வெளியுறவு துறை அதிகாரியாவார். ஐஎஃப்எஸ் முடித்துள்ளார். இவர் கடந்த 2009-2013 வரை ஐ.நாவுக்கான
இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக இருந்தார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலின் பயங்கரவாத தடுப்பு குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார். சர்வதேச அமைதி நிறுவனத்தின் துணை தலைவராகவும் இருந்துள்ளார்.
கஜேந்திர சிங் ஷெகவாத்- ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். கஜ்ஜு பானா என இவரது ஆதரவாளர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். தற்போது ஜோத்பூர் தொகுதியின் லோக்சபா உறுப்பினராக உள்ளார். இவர் பாஜக விவசாய அணியின் தேசிய பொதுச் செயலாளராகவும் உள்ளார். மிகவும் எளிமையானவர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவை காட்டிலும் சமூக வலைதளங்களில் ஷெகவாத்தை பின்தொடர்ந்தோர் ஏராளமானோர் என்ற சாதனை படைத்தவர்.
அனந்தகுமார் ஹெட்ஜே- இவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் உத்தர கன்னடா தொகுதியின் உறுப்பினராவார். இவர் கடந்த ஜனவரி 2-ஆம் தேதி 3 மருத்துவர்களை பொதுமக்கள் மத்தியில் அடித்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. எனினும் மருத்துவர்கள் இவர் மீது புகார் அளிக்கவில்லை.
அல்போன்ஸ்- இவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியாவார். 1979-இல் ஐஏஎஸ் பயிற்சி முடித்தவர். கடந்த 2011-இல் பாஜகவில் இணைந்த இவர் கன்ஜிராப்பள்ளி தொகுதியின் எம்.பி.யாவார். இவர் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். கல்வி இயக்கத்தை தொடங்கிய இவர் கடந்த 1989-இல் இந்தியாவிலேயே கோட்டயத்தை 100 சதவீத கல்வி அறிவு கொண்ட நகரமாக உருவாக்கினார்.