சிக்கன் விரும்பிகளே உஷார்.. கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிப்பு! தீவிர சோதனை
கொச்சி: டெல்லி மற்றும் மத்திய பிரதேசத்தை தொடர்ந்து தற்போது கேரளாவிலும், பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவின் கடலோர ஆழப்புழா மாவட்டத்தில் வாத்துகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததையடுத்து, மாவட்ட நிர்வாகம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இதற்காக அதிவிரைவு தடுப்பு குழுக்களை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது.
முன்னதாக, உயிரிழந்த வாத்துக்களின் ரத்த மாதிரியை போபாலிலுள்ள தேசிய விலங்குகள் நோய் குறித்த ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து, பறவை காய்ச்சலால் (Avian influenza) அவை இறந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
"வைரஸ் பாதித்த வாத்துகள் பலவும் இறந்துள்ள நிலையில் எஞ்சிய வாத்துக்களை அடையாளம் கண்டுபிடித்து அவற்றை அழிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் அமைத்த குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன" என மாவட்ட கலெக்டர் வீணா மாதவன் தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டு ஆழப்புழாவின் குட்டநாடு பகுதியில் மிகப்பெரிய அளவில் பறவைக்காய்ச்சல் பரவியதை மத்திய விவசாயத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் நினைவு கூர்ந்துள்ள ஆழப்புழா எம்.பியும், முன்னாள் அமைச்சருமான வேணுகோபால், கேரள அரசுக்கு மத்திய அரசு உரிய உதவிகளை செய்ய கோரியுள்ளார்.
கேரளாவிலிருந்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும், வாத்து, கோழி போன்றவை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.