ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் ஜிகா வைரஸ்.. இப்போது பறவை காய்ச்சல்.. பரிதவிக்கும் கடவுளின் தேசம்!
கோழிக்கோடு: ''இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு'' என்று அனைவரும் பரிதாபப்படும் அளவுக்கு நமது அண்டை மாநிலமான கேரளாவின் நிலைமை மிக மோசமாக உள்ளது. உலக நாடுகளில் சுற்றி திரிந்த கொரோனாவை முதன்முதலில் இந்தியாவுக்கு வரவேற்றது கேரளாதான்.
சீனாவில் இருந்து வந்த கேரளத்தை சேர்ந்த மருத்துவ மாணவிதான் இந்தியாவில் முதல் கொரோனா தொற்றாளர் என்ற மோசமான சாதனையை வைத்துள்ளார். அதன்பிறகு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா ஆட்டம் போட தொற்றை கட்டுப்படுத்தியது கேரளா.
இதனால் உலக சுகாதார அமைப்பே கேரளாவை பாராட்டி தள்ளியது. 'கேரளா மாடல்' என்று நெட்டிசன்கள் புகழ்மழை பொழிந்தனர்.
இந்த ஆண்டிலேயே.. மதுரை எய்ம்ஸில் மாணவர் சேர்க்கை நடத்த தயார்.. குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு
கேரளா மாடல் நொறுங்கியது
ஆனால் கொரோனா இரண்டாவது அலையின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் 'கேரளா மாடல்' சுக்குநூறாகிப் போனது. 2-வது அலை தொடக்கத்தில் கேரளாவில் 100 கி.மீ வேகத்தில் டாப் கியரில் பயணிக்க தொடங்கிய கொரோனா வைரஸ், இப்போது 200 கி.மீ வேகத்தில் அசுர பயணம் மேற்கொண்டு வருகிறது. அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 2,000-க்குள் அடங்கி இருக்க, கேரளாவில் நேற்று மட்டும் 22,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாசிட்டிவ் ரேட் மிக அதிகம்
கொரோனாவே மனசு வந்து ''போதும் இவங்கள விட்ருவோம்'' என்று சொல்லும் அளவுக்கு கடவுளின் தேசம் பரிதவிக்கிறது. சுமார் 33 லட்சம் மொத்த பாதிப்புகளை கொண்டு மகாராஷ்டிராவுக்கு அடித்தபடியாக நாட்டிலேயே இரண்டாம் இடத்தில் உள்ளது கேரளா. கொரோனா நேர்மறை(பாசிட்டிவ் ரேட்) விகிதம் 12 சதவீத்திலேயே நிலை கொண்டு இருப்பதுதான் தினசரி பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணம்.
ஜிகா வைரஸ் அச்சுறுத்தல்
இது ஒருபக்கம் இருக்க ''நானும் எனது பங்குக்கு ஆட்டம் போட்டுக்கிறேன்'' என்று ஜிகா வைரஸும் கேரளாவில் பீதியை கிளப்பி வருகிறது. சுமார் 56 பேர் இதுவரை ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 வயது, 12 வயது சிறுவர்களை ஜிகா வைரஸ் குறிவைத்து தாக்கி வருவது கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜிகாவும் ஒரு பக்கம் இருக்க தற்போது பறவை காய்ச்சலும் மீண்டும் மிரட்ட வந்துள்ளது.
தற்போது பறவை காய்ச்சல்
கேரளாவை பொறுத்தவரை பறவை காய்ச்சல் அடிக்கடி வந்து செல்லும் விருந்தாளி போன்றதாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அங்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் கொத்து, கொத்தாக செத்து விழுந்தன. இதனை பரிசோதித்தபோது பறவை காய்ச்சல் காரணமாக இறந்தது தெரியவந்தது. இதனால் கேரளா-தமிழ்நாடு எல்லையில் தமிழ்நாட்டுக்கு வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி அடிக்கும் பணி தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தீவிர சோதனை
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளில் கிருமி நாசினி தெளித்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் கொரோனா, மறுபக்கம் ஜிகா வைரஸ், தற்போது பறவை காய்ச்சலும் வந்துள்ளதால் கேரள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.