ஹாக்கி பிதாமகன் தயான் சந்த் பிறந்த தினம் இன்று.. தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடுவோம்
டெல்லி: இந்தியாவில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக (National Sports Day) கொண்டாடப்படுகிறது. நாட்டின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் சாதனை படைத்த தயான் சந்த் நினைவாக அவரின் பிறந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது இந்த தேசிய விளையாட்டு தினம்.
இந்தியா 1928, 1932 முதல் 1956 வரை நடந்த ஒலிம்பிக்ஸில் தங்கப்பதக்கத்தை வென்றது. 1960-ம் ஆண்டு வெள்ளி பதக்கம், 1964-ம் ஆண்டு தங்கம், 1968, 1972-ம் ஆண்டு வெண்கப் பதக்கம் பெற்றது. 1980-ம் ஆண்டு மீண்டும் தங்கத்தை தக்க வைத்தது. இவ்வாறு ஹாக்கி விளையாட்டில் இந்திய அணி அசைக்க முடியாத இடத்தில் இருந்தது. பின்னர், 2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸில் தான் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. இந்த தங்கப்பதக்கத்தை அபினவ் பிந்ரா பெற்றுத் தந்தார்.
ஹாக்கி போட்டியில் உலக அரங்கில் இந்தியா தனி சிறப்பு பெற்று விளங்கியதற்கு காரணம் ஹாக்கி வீரர் மேஜர் தயான்சிங் தான். இளம் வயதில் ஹாக்கிப் போட்டிக்காக இவர் இரவில் பயிற்சி மேற்கொள்வாராம். இதனால், அவரது நண்பர்கள் அவரை சந்த் என்று அழைத்தனர். சந்த் என்பதன் பொருள் நிலவு ஆகும். இதனால் தயான்சிங் பெயர், தயான் சந்த் சிங் என மாறியது.
தயான் சந்த் கடந்த 1905-ம் ஆண்டு, ஆகஸ்ட் 29-ம் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தார். பிரிடிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய தயான் சந்தின் தந்தை சாமேஸ்வர் தத் சிங், ராணுவ ஹாக்கி அணிக்காக விளையாடி இருக்கிறார். சாமேஸ்வர் தத் சிங் தனது பணி நிமித்தமாக தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டதால், அது தயான் சந்த்தின் கல்விக்கு தடையாக அமைந்துவிட்டது. இதனால், 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார் தயான் சந்த். பின்னர் தனது தந்தையில் ஹாக்கி ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டார்.
ஹாக்கியின் மீதிருந்த ஆர்வ்த்தால் சிறுவயதிலே மரக்கிளைகளை உடைத்து ஹாக்கி பேட், கிழிந்த துணிகளை வைத்து பந்து தயாரித்து விளையாடினார் தயான் சந்த். தயான் சந்த்துக்கு அப்போது 16-வயது. ஒருமுறை அவரது தந்தை விளையாடிய ஹாக்கி அணி தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டது. அப்போது ராணுவ அதிகாரி அனுமதியுடன், தந்தை அணியில் களம் இறங்கினார் தயான் சந்த்.
அப்போது அபாராமாக விளையாடிய தயான் சந்த் நான்கு கோல்கள் போட்டு அணியை வெற்றி பெற செய்தார். இதுவே இவருக்கு ராணுவபணி கிடைக்க வாய்ப்பாக அமைந்தது. ராணுவ அதிகாரியான போல்திவாரி என்பவர், ஹாக்கி குறித்த நுணுக்கங்களை தயான் சந்த்திற்கு கற்றுக்கொடுத்தார்.
1928-ம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் இந்திய அணி நெதர்லாந்தை 3--0 என்ற கோல் கணக்கில் வென்று தங்கம் வென்றது. இந்த ஒலிம்பிக்ஸில் தயான் சந்த் சிங் தான் விளையாடிய 5 போட்டிகளில் 14 கோல் அடித்து அசத்தினார்.
1932-ம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் தனது சகோதரர் ரூப்சிங் உடன் சேர்ந்து விளையாடி தங்கத்தை பெற்றுத் தந்தார். 1936-ம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் ஹிட்லரின் தேசமான ஜெர்மன் பெர்லினில் நடந்தது. அப்போது, இந்தியாவின் கேப்டனாக இருந்த தயான் சந்த் சிங், ஜெர்மனியை 8--1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தினார்.
இதையடுத்து, பெரிய பதவி தருகிறேன். எங்கள் நாட்டுக்காக விளையாட வந்துவிடுங்கள்' - என்று ஹிட்லர் கேட்டபோது, அதை மறுத்த தயான் சந்த் தாய்நாடுதான் பெரிது என்று இந்தியாவுக்காக தொடர்ந்து ஹாக்கி விளையாடினார் .
1940-ம் ஆண்டு வரை ஹாக்கி விளையாட்டு வீரராக இருந்த அவர், பின் இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். ஹாக்கியில் சிறந்து விளங்கிய அவருக்கு 1956-ம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இதன் பின்னர் ராணுவத்தில் மேஜர் பட்டம் பெற்ற அவர் 1956-ம் தனது பணியை நிறைவு செய்தார்.
தனித்துவமான திறனை வெளிப்படுத்தி, கோல் அடிக்கும் தயான் சந்த் சிங்கை ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி என்றே அழைத்து வந்தனர். மேலும், 1928-ம் ஆண்டு முதல் 1948-ம் ஆண்டு வரை சர்வதேச ஹாக்கி போட்டிகளில் 400கோல்கள் அடித்துள்ளார்.
இவரது புகழை போற்றும் வகையில், லண்டன் ஜிம்கானா கிளப் ஹாக்கி மைதானத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது. 2012-ல் இவரது உருவம் பொறித்த தபால்தலையை வெளியிட்டது இந்திய அரசு. டெல்லியில் தயான் சந்த் பெயரில் தேசிய விளையாட்டு அரங்கம், உத்திரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள சிர்குரி மலையில் சிலை என அவர் கவுரவிக்கப்பட்டுள்ளார். தயான் சந்த் பெயராலேயே தேசிய விருதுகளும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது
1928-ம் ஆண்டு நெதர்லாந்தில் நடந்த போட்டியில் தயான் சந்த்தின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், தயான் சந்த் ஹாக்கி மட்டையை உடைத்து சோதனை செய்த சம்வமும் நிகழ்ந்துள்ளது. அதில் போட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பல வெற்றிகளை குவித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தயான் சந்த், தனது வாழ்வின் இறுதியில் பொருளாதார நெருக்கடியை சந்தித்தார். அரசின் கவனம் அவரது பக்கம் திரும்பாத நிலையில், கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்ட தயான் சந்த், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பொதுப்பிரிவிலேயே வைத்து சிகிச்சை பெற்றார். 1979-ம் டிசம்பர் 3-ந் தேதி இறந்தார்.
இவ்வாறு ஹாக்கியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள தயான் சந்த்துக்கு, நமது தேசிய விளையாட்டான ஹாக்கியில் இந்தியா மீண்டும் எழுச்சி பெறுவது ஒன்றே தயான் சந்த்துக்கு நாம் அளிக்கிற உண்மையான சல்யூட்!