குஜராத் முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு... டிசம்பர் 25ல் பதவியேற்பு!
குஜராத் முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக நிதின் படேலும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அஹமதாபாத் : குஜராத் மாநில முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதே போன்று துணை முதல்வர் பொறுப்பிற்கு ஏற்கனவே அந்தப் பதவியில் இருந்த நிதின் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தலில் பாஜக 99 இடங்களில் வென்று 6 முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜக வெற்றி பெற்றாலும் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படாத நிலையில் முதல்வராக இருந்த விஜய் ரூபானியும், துணை முதல்வராக இருந்த நிதின் படேலும் தங்களது பதவியை நேற்று ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் அடுத்த முதல்வர் யார் என்று தேர்ந்தெடுப்பதற்காக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுடன் நிதியமைச்சர் அருண் அஜட்லி இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் முதல்வராக விஜய் ரூபானியையும், துணை முதல்வராக நிதின் படேலையும் மீண்டும் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது பாஜக.
கடந்த ஆகஸ்ட் 2016ம் ஆண்டில் குஜராத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரூபானி இந்த முறை ராஜ்கோட் மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான அமைச்சரவை டிசம்பர் 25ல் பொறுப்பேற்றுக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.