மேற்கு வங்கம் விரைவில் காவிகளின் கோட்டையாகும்? லோக்சபா தேர்தலில் அதகள வெற்றியை அள்ளிய பாஜக!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தை முழுமையாக பாஜக கைப்பற்றுவதற்காக சாத்தியங்கள் இருப்பதையே லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன.
2014 லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளில்தான் பாஜக வென்றது. ஆனால் இம்முறை ஆழிப்பேரலையைப் போல வடக்கு மேற்கு வங்கத்தின் அத்தனை தொகுதிகளையும் அள்ளிக் கொண்டு மொத்தம் 18 தொகுதிகளில் வெற்றியைப் பெற்றுள்ளது. இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் கோட்டைகளுக்குள் வெற்றி கொடி நாட்டியிருக்கிறது.
அவரை தாக்கியது தவறு.. ஒரே ஒரு டிவிட்டால் கம்பீரை 'டக் அவுட்' செய்த பாஜகவினர்.. என்ன நடந்தது!
முக்கிய காரணங்கள்
பாஜகவுக்கு ஆதரவான பேரலை வீசியது; வடக்கு வங்கத்தில் ஒட்டுமொத்தமாக வென்றது; மாநிலத்தின் மேற்கு பகுதியாக ஜங்கல் மஹால் பகுதியையும் கைப்பற்றியதுதான் பாஜகவின் வெற்றிக்கான காரணங்கள்.
பாஜக வாக்கு சதவீதம்
பொதுவாகவே ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் பாஜகவின் வாக்கு சதவீதம் மிக அபாரமாக உயர்ந்துள்ளது. பஹரம்பூர் தொகுதியில் மிக குறைவாக 3.93%; புருலியாவில் 42.15% என்கிற அளவில் வாக்கு உயர்வை பெற்றுள்ளது பாஜக. சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் 9 முதல் 35% வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. 19 தொகுதிகளில் 25% வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கிறது.
இடதுசாரிகளுக்கு அடி
இடதுசாரிகளின் வாக்கு சதவீதம் அப்படியே சரிவை சந்தித்துள்ளது. மிக குறைந்தபட்சமாக 10.6% டார்ஜிலிங்கிலும் அதிகபட்சமாக மதுர்பூரில் 32.1% என்கிற அளவில் வாக்குகளைப் பறிகொடுத்திருக்கிறது இடதுசாரி கட்சிகள். 12 தொகுதிகளில் 25% வாக்குகளை இழந்திருக்கிறது இடதுசாரி கட்சிகள்.
ஏற்றம், இறக்கத்தில் திரிணாமுல்
திரிணாமுல் காங்கிரஸைப் பொறுத்தவரையில் அதன் வாக்கு சதவீதம் உயர்ந்தும் இருக்கிறது; சரிவையும் சந்தித்துள்ளது. 16 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. 26 தொகுதிகளில் அதன் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. ஆரம்பாக் தொகுதியில் 10..78% சரிவையும் ஜங்கிபூரில் 24.61% உயர்வையும் பெற்றிருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ். 10 தொகுதிகளில் சராசரியாக 10% வாக்குகள் திரிணாமுல் காங்கிரஸுக்கு அதிகரித்திருக்கிறது.
இடது ஓட்டுகள் எங்கே?
திரிணாமுல் காங்கிரஸ் அரசு மீதான நம்பகத்தன்மை குறைந்ததும் மோடி மீதான நம்பிக்கை அதிகரித்ததும் இந்த நிலைமைக்கு காரணம். இஸ்லாமியர்களுகக்கு எதிரான மனநிலையும் இந்த தேர்தல் முடிவுகளுக்கு ஒரு காரணமாகும். இதைவிட பெரும்பகுதியான இடதுசாரி வாக்காளர்கள் பாஜகவுக்கும் திரிணாமுலுக்கும் இம்முறை வாக்களித்தனர். இடதுசாரிகள் மேற்கு வங்கத்தில் தங்களது அடித்தளத்தையே பறிகொடுத்துவிட்டனர் என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.