திரிபுராவில் பாஜக ஆட்சி.. மேகாலயா, நாகாலாந்தில் கூட்டணி அரசுகள்... நடப்பது இதுதான்!
திரிபுராவில் பாஜக ஆட்சி அமைக்கிறது. மேகாலயா, நாகாலாந்தில் கூட்டணி அரசுகள் அமைகின்றன.
Recommended Video
அகர்தலா/ ஷில்லாங்/ கோஹிமா: திரிபுராவில் பாஜகவும் மேகாலயா மற்றும் நாகாலாந்தில் மாநில கட்சிகளுடன் இணைந்த பாஜக கூட்டணி அரசும் அமைகின்றன.
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல்கள் பிப்ரவரி 18 மற்றும் பிப்ரவரி 27-ல் நடைபெற்றன. அப்போது பதிவான வாக்குகள் மார்ச் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன,.
திரிபுராவில் பாஜகவும் மேகாலயா- நாகாலாந்தில் மாநில கட்சிகளுடன் இணைந்த பாஜக கூட்டணி அரசும் அமைந்துள்ளன. ஒவ்வொரு மாநிலத்தின் தற்போதைய நிலவரமும் அரசுகளும்:
திரிபுராவில் பாஜக
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து முதல்வர் பதவியை மாணிக் சர்க்கார் ராஜினாமா செய்தார். இம்மாநிலத்தில் மார்ச் 8-ந் தேதி பாஜக ஆட்சி அமைக்கிறது. பாஜகவின் மாநில தலைவர் பிப்லப் குமார் தேப் முதல்வராக பதவியேற்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் முதல்வராகும் ரியூ
நாகாலாந்தில் தேசிய மக்கள் முன்னணி(என்பிஎப்) 27 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 31 எம்.எல்.ஏக்களை பெற தவறிவிட்டது. தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் என்பிஎப் கூட்டணி வைத்திருந்தது. ஆனாலும் மொத்தம் 29 இடங்கள்தான் இந்த அணிக்கு உண்டு.
அதேநேரத்தில் என்டிபிபி 17; பாஜக 12 இடங்களைக் கைப்பற்றி மொத்தம் 29 எம்.எல்.ஏக்களைக் கொண்ட அணியாகவும் இருந்தது. என்பிஎப் அணியில் இருந்த ஐக்கிய ஜனதா தளம், பாஜக அணிக்கு ஆதரவு தந்தது. அதேபோல் சுயேட்சை ஒருவரும் பாஜக அணிக்கு ஆதரவு தர பெரும்பான்மைக்கு தேவையான 31 எம்.எல்.ஏக்கள் என்டிபிபி-பாஜக அணிக்கு கிடைத்தது. இதையடுத்து ஆளுநரை சந்தித்த நெய்பூ ரியோ ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஏற்கனவே நாகாலாந்தில் 3 முறை முதல்வராக இருந்தவர் ரியோ.
தேசிய மக்கள் கட்சி கூட்டணி அரசு
மேகாலயா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதனால் ஆட்சி அமைக்க நள்ளிரவில் உரிமை கோரியிருந்தது. பெரும்பான்மைக்காக யுடிஎப்- ஹெச்எஸ்பிடிபி மற்றும் என்சிபி ஆகியவையுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தது.
முதல்வராகிறார் சங்மா மகன்
இன்னொரு பக்கம் மறைந்த பி.ஏ.சங்மாவின் தேசிய மக்கள் கட்சி 17 இடங்களில் வென்றது. பாஜக 2 இடங்களில் வென்றது. இந்த அணியும் மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது. மறைந்த பி.ஏ. சங்மாவின் மகன் கான்ராட் சங்மா நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். கான்ராட் சங்மா தற்போது லோக்சபா எம்.பி.யாகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.