எங்களுக்கு விவசாயிகள்தான் முக்கியம்...பாஜக கூட்டணியிலிருந்து...ராஜஸ்தானின் ஆர்எல்பி கட்சி விலகல்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி (ஆர்எல்பி) வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து(என்.டி.ஏ) அதிரடியாக வெளியேறி உள்ளது.
ஆனால் காங்கிரசுடன் எந்த நிலையிலும் கூட்டணியை வைக்க மாட்டோம் எனவும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் எம்பி பதவியை ராஜினாமா செய்வேன் எனவும் அந்த கட்சியின் தலைவர் அனுமன் பெனிவால் தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 30 நாட்களுக்கும் மேலாக போாரட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் நடத்திய பல கட்ட சுற்றுப் பேச்சும் தோல்வி அடைந்துள்ளது. வருகிற 29-ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் என விசாயிகள் அறிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி (ஆர்எல்பி) வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து(என்டிஏ) இன்று அதிரடியாக வெளியேறியுள்ளது.ஆல்வார் மாவட்டத்தில் ஷாஜகான்பூரில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் பங்கேற்ற ஆர்.எல்.பி தலைவரும், எம்.பி.யுமான அனுமன் பெனிவால் இந்த முடிவை அறிவித்தார்.
டிசம்பர் 29-ல் பேச்சுவார்த்தைக்கு தயார்... எங்கள் குரலை அரசு கேட்கணும்... விவசாயிகள் அறிவிப்பு!
விவசாயிகள் மத்தியில் பேசிய அனுமன் பெனிவால் கூறியதாவது:-3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள்(ஆர்.எல்.பி) தேசிய ஜனநாயக கூட்டணியில்(என்.டி.ஏ) இருந்து வெளியேறுகிறோம். ஆனால் காங்கிரசுடன் எந்த நிலையிலும் கூட்டணியை வைக்க மாட்டோம். வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானதாகும். இந்த சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் நான் எனது எம்பி பதவியையும் ராஜினாமா செய்வேன் என்று அனுமன் பெனிவால் கூறினார்.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் பாஜகவுடனான என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவது குறித்தது பரிசீலனை வருவதாக அனுமன் பெனிவால் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து என்டிஏ கூட்டணியில் இருந்த ஷிரோமணி அகாலிதளம் கட்சியும் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது குறிப்படத்தக்கது. வேளாண் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பாஜகவின் கூட்டணி கட்சிகளே உறவை முறித்து கொள்வது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.