ஆந்திராவில் 3-வது அணி உதயம்... பவன் கல்யாணின் ஜனசேனாவுடன் பாஜக மீண்டும் கூட்டணி
அமராவதி: ஆந்திராவில் 3-வது அணியாக நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனாவுடன் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது.
ஆந்திராவில் பாஜகவால் தனித்து காலூன்ற முடியவில்லை. ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிகளின் செல்வாக்குகளால் பாஜகவால் கால் பதிக்க இயலவில்லை.
இதனால் பழைய கூட்டணி கட்சியான பவன் கல்யாணின் ஜன சேனாவுடன் கை கோர்க்க பாஜக முடிவு செய்தது. ஜனசேனா கட்சிக்கும் எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி கிடைக்கவில்லை.
ஜன சேனாவுக்கும் வாழ்வா? சாவா என்கிற நெருக்கடியான நிலைமைதான். இதனையடுத்தே மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்கிற முடிவுக்கு வந்தார் பவன் கல்யாண்.
இதன் முதல் கட்டமாக டெல்லி சென்று பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார் பவன் கல்யாண்.. இதனைத் தொடர்ந்து விஜயவாடாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஜன சேனா- பாஜக இடையேயான கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் போட்டி... காங்கிரஸை திமுக கழற்றிவிடுவதன் பின்னணி
ஜன சேனா தலைவர் பவன் கல்யாண், மாநில பாஜக தலைவர் கன்னா லட்சுமி நாராயணா இருவரும் கூட்டாக இதனை அறிவித்தனர். முன்னதாக இரு கட்சி நிர்வாகிகளும் 4 மணிநேரம் தீவிர ஆலோசனை நடத்தினர்.
அப்போது பேசிய பவன் கல்யாண், எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்றார். மேலும் இரு கட்சி நிர்வாகிகளையும் கொண்ட ஒருங்கிணைப்பு குழு ஒன்று அமைக்கப்படும். 2024 சட்டசபை தேர்தலில் நாங்கள் எங்கள் பலத்தை நிரூபிப்போம் என்றார்..