மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா தொகுதி பங்கீடு சுபம்.. பாஜகவுக்கு கிடைத்தது லக்
மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா நடுவே தொகுதிப் பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவசேனாவை ஒப்பிட்டால், பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அக்டோபர் 21ம் தேதி நடக்க உள்ள இந்த தேர்தலில், பாஜக, சிவசேனா மற்றும் சில கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இன்று, மும்பையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தொகுதி பங்கீடு தொடர்பான விவரத்தை வெளியிட்டனர்.
இதன்படி பாஜக 148 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சிவசேனா 126 தொகுதிகளில் களமிறங்குகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. "இரு கட்சிகள் நடுவேயும் சில வேறுபாடுகள், கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் கூட இந்துத்துவா என்ற ஒற்றை நூலில் இவ்விரு கட்சிகளும் இணைந்துள்ளன" என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரே கூறுகையில், "இரு கட்சிகளுக்கும் நடுவே போட்டியிடக்கூடிய சீட்டுகளில் சில வித்தியாசம் இருக்கலாம். மகாராஷ்டிர மாநிலத்தின் நிலவரம் தற்போது மாறியுள்ளது. அதை பரிசீலனை செய்துதான் இரு கட்சிகளும் சேர்ந்து இந்த முடிவுக்கு வந்துள்ளோம்.
யார் பெரியவர், யார் அண்ணன், யார் தம்பி என்று விவாதித்துக் கொண்டிருப்பதை விட, நாங்கள் சகோதரர்களாக இருக்கிறோம் என்று சொல்வது தான் முக்கியமானது. நாங்கள் சகோதரர்களாக இணைந்து செயல்படுவோம்" என்றார் அவர்.