3 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி: வரும் 19ம் தேதி நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தலைமை டெல்லியில் இன்று வெளியிட்டுள்ளது.
கடந்த மே மாதம் தமிழகத்திற்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததையடுத்து அந்த 2 தொகுதிகளிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மேலும், திருப்பரங்குன்றம் தொகுதியின் எம்எல்ஏ சீனிவேல் மரணமடைந்ததையடுத்து அந்த தொகுதியும் காலியாக இருந்தது.
இதனையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் வரும் 19ம் தேதி இந்த 3 தொகுதிகளுக்கும் தேர்தலை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களை பாஜக தலைமை டெல்லியில் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, அரவக்குறிச்சி தொகுதியில் எஸ்.பிரபுவும், தஞ்சாவூர் தொகுதியில் எம்.எஸ். ராமலிங்கமும், திருப்பரங்குன்றத்தில் பேராசிரியர் சீனிவாசனும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக இடைத்தேர்தலில் ஆளும் கட்சித்தான் வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தாலும், தேர்தலை புறக்கணிக்கக் கூடாது என்ற நிலைபாட்டின் அடிப்படையில் இந்த 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் பாஜக அறிவித்துள்ளது. திமுக, அதிமுக வேட்பாளர்கள் போன்று பாஜக வேட்பாளர்கள் மக்களிடையே பிரபலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.