உணர்வுகளை தூண்டும் வகையில் சர்ச்சை கருத்துக்களை பேச கூடாது.. சாத்வி பிரக்யாவுக்கு பாஜக தடை
போபால்: தேர்தல் நேரத்தில் தேவையில்லாமல் உணர்வுகளை தூண்டக்கூடிய சர்ச்சை கருத்துக்களை பேச கூடாது என சாத்வி பிரக்யாவுக்கு பாரதிய ஜனதா தலைமை தடை விதித்துள்ளது.
மக்களவை தேர்தலில் மத்தியப்பிரதேச தலைநகர் போபால் தொகுதியின் பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார் சாத்வி பிரக்யா. போபால் தொகுதியில் இதுவரை நடைபெற்றுள்ள 16 மக்களவை தேர்தலில் 8 முறை பிஜேபியும் காங்கிரஸ் 6 முறையும் பாரதிய ஜன சங்கம் மற்றும் பாரதிய லோக் தளம் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் எப்போதும் காவி உடையில் காட்சியளிக்கும் பிரக்யா தாகூர், தம்மை ஒரு சாத்வி என கூறிக்கொள்பவர். அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை இவர் தெரிவித்து வருவதால், போபால் தொகுதியில் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே பாஜக மீதான தவறான கண்ணோட்டம் அதிகமாகியுள்ளது.
2006-ம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு குற்றச்சாட்டில் சிக்கி இருந்த சாத்வி பிரக்யா தாக்கூர், தற்போது ஜாமீனில் உள்ளார். மேலும் தேர்தல் ஆணையம் அவரது பேச்சுகளுக்கு விளக்கம் அளிக்குமாறு இருமுறை நோட்டீஸ் அனுப்பிவிட்டது. இதனையடுத்து பாரதிய ஜனதா அலுவலகத்தில் வைத்து சுமார் 4 மணி நேரம் பிரக்யாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்திய தேசிய பாதுகாப்பு.. புதிய கொள்கை அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்.. இதுதான் சிறப்பம்சம்!
அப்போது அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெளிவாக்குமாறு கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தான் இதுவரை பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு விளக்கம் அளித்தார். சாத்வி பிரக்யா சமீபத்தில் தான் பாரதிய ஜனதாவில் சேர்ந்தார். போபால் மக்களவை தொகுதியில் சீட் வழங்கப்படும் என்ற உறுதியை அடுத்து அவர் அக்கட்சியில் இணைந்தார்.
கட்சியில் இணைந்த ஒரு வாரத்திற்குள் பிரக்யா ஏகப்பட்ட சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து விட்டார். பாபர் மசூதி இடித்த சம்பவத்தில் நானும் இருந்தேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். ராமரின் மண்ணில் இருந்து ஒரு கறை அகற்றப்பட்டுள்ளது. கடவுள் எனக்கு இந்த வாய்ப்பை அளித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன் என பேசினார்.
மேலும் மும்பை தாக்குதலின் போது பலியான ஏடிஎஸ் தலைவர் ஹேமந்த் கர்கரே, தாம் சாபம் விட்டதால் மரணித்ததாக கூறி அதிர வைத்தார். மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தம்மை சிக்க வைத்து, சிறையில் கொடுமைப்படுத்தினார் ஹேமந்த் கர்கரே. ஆதலால் நான் விட்ட சாபத்தால் தான் ஒரே மாதத்தில் அவர் உயிரிழந்தார் என்றாா்.
பின்னர் எதிர்கட்சிகளின் கடும் கண்டனத்தை தொடர்ந்து ஹேமந்த் கர்கரே தொடர்பான தனது கருத்துக்களை திரும்ப பெற்றார். மன்னிப்பும் கோரினார். தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை சாத்வி பிரக்யா தெரிவித்து வருவது பாரதிய ஜனதாவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரை நேரில் அழைத்து விசாரித்த அக்கட்சி தலைமை, இனி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேச கூடாது என தடை விதித்துள்ளது