கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கிறது பாஜக.. எடியூரப்பா அதிரடி பேட்டி #cauvery
பெங்களூர்:மாலை 6 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தாரமையா கூட்டியுள்ளார். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளது. இவ்விரு கூட்டங்களும், தலைமைச் செயலகமான விதான சவுதாவில் வைத்து நடைபெற உள்ளது.
இதனிடையே, அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக, கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா அறிவித்துள்ளார். ஷிமோகாவில் இன்று காலை நிருபர்களிடம் பேசிய எடியூரப்பா, இதற்கு முன்பு நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டங்களில், பாஜக கூறிய ஆலோசனைகளை முதல்வர் சித்தராமையா மதிக்கவில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காதீர்கள் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை வழங்கியும், சித்தராமையா தண்ணீர் திறப்பை உறுதி செய்துவிட்டார்.
எனவே, இன்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது சரியாக இருக்காது. சித்தராமையா,அவசரமாக சட்டசபையை கூட்டி காவிரி பற்றி விவாதிக்க முன்வர வேண்டும் என்றார் எடியூரப்பா. பாஜகவை சிக்கலில் மாட்டி விடும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்தில் சித்தராமையா சில முடிவுகளை எடுக்க கூடும் என்ற யூகத்தின்பேரில் எடியூரப்பா இவ்வாறு பேட்டியளித்ததாக கூறப்படுகிறது.
காவிரியிலிருந்து வரும் 27ம் தேதிவரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தை இன்னும் 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதுகுறித்து இன்று அமைச்சரவை மற்றும், அனைத்துக் கட்சிகளை கூட்டி விவாதிக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா என்பது குறிப்பிடத்தக்கது.