மக்களின் சக்தி தான் உயர்ந்தது... காங்கிரஸ் நம்புகிறது... பிரியங்கா காந்தி பேச்சு
வயநாடு: அனைத்து மாநிலங்களும் எங்களுக்கு ஒன்று தான் என்பதை காட்டவே கேரளா வயநாட்டில் போட்டி என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார்.
வயநாடு தொகுதியில் வருகிற 23-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். 21-ந் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய உள்ளது. இதனையொட்டி, இன்று முதல் 2 நாள் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார் பிரியங்கா காந்தி.
இந்தநிலையில், பிரச்சாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி, பழங்குடி மக்களின் கலாசாரம், வயநாடு மக்களின் கலாசாரத்தை உணர்கிறேன் என்றார்.
தமிழகம், உ.பி., குஜராத் அனைத்தும் எனது நாடே என்று குறிப்பிட்ட அவர், அனைத்து மாநிலங்களும் எங்களுக்கு ஒன்று தான் என்பதை காட்டவே கேரளா வயநாட்டில் ராகுல் போட்டியிடுவதாக கூறினார்.
நிலவில் நிலம் தருவேன்னு சொன்னாரா ராகுல் காந்தி.. உண்மையைச் சொன்ன பிபிசி
மேலும், 5 ஆண்டுகளுக்கு முன்பு, பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பாஜக, நாட்டு மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார். பாஜக ஆட்சியின் 5 வருடத்தில் நாடு எந்த வளர்ச்சியையும் அடையவில்லை என்பதற்கு சாட்சிகள் உள்ளன என்று கூறிய பிரியங்கா காந்தி. பா.ஜ.க. நாட்டில் பிளவை ஏற்படுத்தியுள்ளது என்றார். மக்களின் உணர்வுகளை பா.ஜ.க. மதிப்பதில்லை என்றும், மக்களின் சக்தி தான் பெரிது என காங்கிரஸ் நம்புவதாகவும் கூறினார்.
முன்னதாக, தேசத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்ற இந்திரா காந்தியின் நோக்கமே, தனது மனதிலும், தனது சகோதரர் ராகுல்காந்தி மனதிலும் இருப்பதாக அவர் கூறினார். இந்த நோக்கத்தை தங்களிடம் இருந்து யாரும் அகற்றிவிட முடியாது என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
வயநாடு தொகுதியில் 80 சதவீதம் பேர் விவசாயிகள் என்பதால், அவர்களுடன் கலந்துரையாடல் நடத்த பிரியங்கா திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு வயநாடு தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகளையும் பிரியங்கா சந்தித்து பேச உள்ளார். 2-வது நாள் நிலம்பூர், மலப்புரம் ஆகிய 2 இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேச உள்ளார். அன்றிரவே அவர் கேரளாவில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.