மீண்டும் பாஜக கோட்டையாகிறது கோரக்பூர்... ஆதித்யநாத் ஐடியாவுக்கு கிடைத்த வெற்றி!!
கோரக்பூர்: உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூர் பாராளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரவி கிஷன் முன்னிலை பெற்றுள்ளார். இதனால், அத்தொகுதி மீண்டும் பாஜகவின் கோட்டையாக மாறுகிறது.
லோக்சபா தேர்தல் முடிவுகளில், தென்மாநிலங்களை தவிர்த்து நாட்டின் பிற பகுதிகளில் பாஜகவின் கை ஓங்கி நிற்கிறது. குறிப்பாக, நாட்டிலேயே அதிக எம்பி தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அங்கு 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அகிலேஷ் யாதவ் - மாயாவதி கூட்டணி பெரும் பின்னடவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றாக கோரக்பூர் விளங்கி வருகிறது.
இந்த தொகுதியில் அம்மாநில முதல்வராக பதவி வகித்து வரும் யோகி ஆதித்யநாத் ஐந்து முறையும், அவரது குரு மஹந்த் அவேத்யநாத் மூன்று முறையும் எம்பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கடந்த 2017ல் நடந்த உ.பி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி வெற்றிபெற்றதயைடுத்து, முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றார். அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.
செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்!
காலியாக இருந்த அந்த தொகுதிக்கு கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவ் - மாயாவதி கூட்டணி சார்பில் போட்டியிட்ட பிரவீண் குமார் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் பாஜக தோல்வியடைந்தது, யோகி ஆதித்யநாத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
மீண்டும் கோரக்பூரில் வெற்றி பெறுவதற்கு புதிய வழியை பாஜக கையாண்டது. இதுவரை அங்கு கோரக்பூர் மடாதிபதிகளாக இருந்தவர்கள் போட்டியிட்ட நிலையில், இந்த முறை பிரபல நடிகர் ரவி கிஷன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். எனவே, இந்த தொகுதியை பாஜக மீண்டும் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்த எதிர்பார்ப்பை பொய்க்காத வகையில், பாஜக வேட்பாளர் ரவி கிஷன் முன்னிலை வகிக்கிறார். சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராம் புவாலைவிட 58,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருக்கிறார் ரவி கிஷன். எனவே, அத்தொகுதி மீண்டும் பாஜக வசமாகிறது.
இந்த தொகுதியை மீண்டும் பாஜக வசம் கொண்டு வருவதற்கு யோகி ஆதித்யநாத் தனிப்பட்ட முறையில் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டார். மேலும், தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்களுக்கு பல அறிவுறைகளையும் வழங்கினார். கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துமனை முன்பு நின்று செல்ஃபி எடுத்து போட்டு வாக்காளர்களை கவருமாறும் அவர் அறிவுறுத்தினார்.
யோகி ஆதித்யநாத்தின் களப்பணியும், ஆலோசனைகளுக்கும் வெற்றி கிடைத்துள்ளதாக தெரிகிறது. அத்தொகுதியில் பாஜக முன்னிலை வகிப்பதால், அத்தொகுதி மீண்டும் பாஜக கோட்டையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.