பாஜகவின் முதல்கட்ட வேட்பாளார் பட்டியல் இன்று முடிவாகும் - பிரகாஷ் ஜவடேகர்
டெல்லி: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று முடிவு செய்யப்பட்டுவிடும் என்று பாஜ.கவின் தமிழக பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவ்டேகர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர்,"கூட்டணி அமைக்க எல்லா கட்சிகளுக்கும் உரிமை உள்ளது. பாஜக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உட்பட சில கட்சிகள் பாஜவுடன் கூட்டணியில் தொடருகின்றன. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பலமுனை போட்டியை பாஜக வரவேற்கிறது.
ஏற்கனவே அறிவித்தபடி பாஜக தலைமையில்தான் கூட்டணி என்பதில் தெளிவாக உள்ளோம். மக்களவை தேர்தலுக்கான கூட்டணி என்பது வேறு. சட்டசபை தேர்தலில் மாநில கட்சிகள் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கருதுவது இயல்புதான்.
எங்களை பொறுத்த வரையில் பாஜக தலைமையிலான கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம். கூட்டணியில் சேர விருப்பமுள்ள பிற கட்சிகள் தலைமையை அணுகலாம்.
டெல்லியில் 2 நாட்கள் நடைபெறும் பாஜக தேர்தல் குழு கூட்டம் இன்று தொடங்குகிறது. இதில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்று மாலைக்குள் முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.