காவிரியில் தண்ணீர் திறப்பை தொடர கர்நாடக அரசு முடிவு.. பாஜகவின் எடியூரப்பா எதிர்ப்பு
பெங்களூர்: தமிழகத்திற்கு, கர்நாடகாவிலிருந்து காவிரி நதிநீரை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கர்நாடகாவில் கலவரம் வெடித்தது. இதுகுறித்து ஆலோசிக்க, முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் சித்தராமையா கூறியதாவது: சட்ட பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசித்த பிறகு, தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட் கூறியபடி தண்ணீரை திறந்துவிடுவது என முடிவு செய்துள்ளோம் என்றார்.
இதற்கு கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், கர்நாடகாவில் தண்ணீர் இருக்கும்போது தமிழகத்திற்கு உயர்ந்த மனப்பாங்கோடு தண்ணீரை பகிர்ந்துள்ளோம். இப்போது கர்நாடகாவில் குடிக்க தண்ணீர் இல்லை. ஆனால் தமிழகத்தில் அணைகளில் தண்ணீர் உள்ளது. இன்னும் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்ய வேண்டியுள்ளது.
எனவே, தமிழகத்திற்கு இப்போது தண்ணீர் விட வேண்டாம் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக வலியுறுத்தியது. இதை சித்தராமையா ஏற்கவில்லை. கர்நாடக விவசாயிகளுக்கு சித்தராமையா துரோகம் இழைத்துவிட்டார்.
இரு மாநிலத்திலும் உள்ள நீர் இருப்பை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தண்ணீரை பங்கீடு செய்வது அவசியம். ஆய்வு செய்ய ஒரு கமிட்டியை உருவாக்க வலியுறுத்தி கர்நாடகா அரசு, சுப்ரீம் கோர்ட்டில் உடனே மனு தாக்கல் செய்ய வேண்டும்.
கர்நாடகாவில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் தோல்வியே இதற்கு காரணம் என்றார் எடியூரப்பா.