கர்நாடகத்தின் பதிலால் இந்தியாவின் கூட்டாச்சி தத்துவம் கேள்விக்குறியாகி உள்ளது: மா.கம்யூ கண்டனம்
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் பதில் மூலம் இந்தியாவின் கூட்டாச்சி தத்துவம் கேள்விக்குறியாகி உள்ளது என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி : காவிரி நதி நீர் பிரச்னையை காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் தேசியப் பிரச்னையாகப் பார்க்காமல், கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்து செயல்படுகின்றன. இது இந்திய கூட்டாச்சி தத்துவத்தையே கேள்விக்குறியாக்குகிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் தொடர்பான வழக்கில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அறிக்கை அளித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரும் வழக்கு கடந்த மே 3ம் தேதி விசாரணைக்கு வந்தது. அதில், வரைவுப் பணிகள் முழுமையடையவில்லை என்றும், இன்னும் கால அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு கேட்டது.
ஆனால், வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மே 8ம் தேதி இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும், முன்னதாக 4 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் திறந்து விடவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அறிக்கை அளித்துள்ளது. மழை பற்றாக்குறையால் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளது. எங்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை உள்ளது தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், கர்நாடக அரசு தண்ணீர் கொடுப்பதாகச் சொன்னால்தான் ஆச்சரியம். ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் கர்நாடக அரசும், மத்திய அரசும் அவமதித்தே வருகிறது.
காவிரிப் பிரச்னையை தேசியப் பிரச்னையாகப் பார்க்காமல், அதை கர்நாடக பிரச்னையாக மட்டுமே காங்கிரஸ், பாஜக கட்சிகள் பார்க்கின்றன. தற்போது அங்கு நடைபெற இருக்கும் சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்தே இரண்டு கட்சிகளும் செயல்படுகின்றன. இதன் மூலம் இந்தியாவின் கூட்டாச்சி தத்துவம் கேள்விக்குறியாகி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.