ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்... ஹரியானா, மகாராஷ்டிரா பாணியில் காத்திருக்கும் களம்?
ராஞ்சி: ஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் திகைப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் நவம்பர் 30-ந் தேதி முதல் டிசம்பர் 19 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பீகாரில் இருந்து பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் 2000-ம் ஆண்டு உருவானது முதல் 2014-ம் ஆண்டு வரை எந்த ஒரு அரசும் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்தது இல்லை. 2014 சட்டசபை தேர்தலில் 37 இடங்களை வென்ற பாஜக சிறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி காலத்தை நிறைவு செய்திருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 41 எம்.எல்.ஏக்கள். 2014 சட்டசபை தேர்தலில் பாஜக 37 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணி கட்சியான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் 5 இடங்களைப் பெற்றது. அதனால் நூலிழைப் பெரும்பான்மையில் பாஜக அரியணை ஏறியது. பின்னர் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 6 எம்.எல்.ஏக்களுடன் ஐக்கியமான காரணத்தால் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை நடத்தியது.
லோக்சபா தேர்தலில் பெருவெற்றி
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் (ஏஜஎஸ்யூ)வுடன் இணைந்து போட்டியிட்டு மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் 12ஐ கைப்பற்றியது. ஆனால் தற்போதைய சட்டசபை தேர்தலில் இப்படியான பெருவெற்றி தங்களுக்கு சாத்தியமே இல்லை என்பதை பாஜக உணர்ந்தே இருக்கிறது.
ஹரியானா நிலவரம் போல..
ஹரியானாவில் பெரும்பான்மை ஜாட் ஜாதியினர்தான் முதல்வராக்கப்பட்டு வந்தனர். அந்த மரபை உடைத்து பஞ்சாபியரான மதன்லால் கட்டாரை முதல்வராக்கியது பாஜக. இதன்விளைவாக ஜாட் மற்றும் தலித்துகள் வாக்குகள் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமாக போனது. இதேபோன்ற நிலைமைதான் ஜார்க்கண்ட்டிலும் இருக்கிறது.
பாஜகவுக்கு பழங்குடியினர் எதிர்ப்பு
இம்மாநிலத்தில் பெரும்பான்மையினராக உள்ள பழங்குடியினரில் ஒருவர்தான் முதல்வராக பதவி வகித்தனர். ஆனால் பழங்குடியினர் அல்லாத ரகுபர்தாஸை முதல்வராக்கியது பாஜக. அத்துடன் பழங்குடியினரின் நிலம் தொடர்பாக பாஜக அரசு நிறைவேற்றிய சட்டங்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி பாஜக அரசை பின்வாங்கவும் வைத்த நிகழ்வுகளும் அரங்கேறி இருக்கின்றன.
அர்ஜூன் முண்டாவுக்கு முக்கியத்துவம்
இதனை உணர்ந்துதான் லோக்சபா தேர்தலில் வென்ற பாஜக, மத்தியில் ஆட்சி அமைக்கும் போது முன்னாள் முதல்வர் அர்ஜூன் முண்டாவை மத்திய அமைச்சராக்கியது. அத்துடன் முதல்வர் ரகுபர்தாஸ் மேற்கொள்ளும் பிரசாரங்களில் அர்ஜூன் முண்டாவும் இருக்க வேண்டும் என்கிற கட்டளையையும் பிறப்பித்திருக்கிறது பாஜக மேலிடம்.
காங்கிரஸ்-ஜேஎம்எம் கூட்டணி
இன்னொரு பக்கம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் கூட்டணி அமைப்பது உறுதியாகி இருக்கிறது. ஹரியானாவில் ஜாட்- தலித்துகள் வாக்குகளை அறுவடை செய்த பாணியில் பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளை மொத்தமாக அள்ள களமிறங்குகிறது காங்கிரஸ். இதற்காக கூட்டணியில் பெரியண்ணன் பாணியைவிட்டுவிட்டு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கவும் இறங்கிவந்துவிட்டது காங்கிரஸ். இது ஏறத்தாழ மகாராஷ்டிராவில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் மேற்கொண்ட இணக்கமான கூட்டணி சூழ்நிலை வெளிப்படுத்துகிறது.
மெகா கூட்டணியா?
இக்கூட்டணியில் இணைய வாய்ப்புள்ள ராஷ்டிரிய ஜனதா தள், இடதுசாரிகள் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. இதனால் இந்த கட்சிகள் காங்கிரஸ்- ஜேஎம்எம் அணியில் இணையுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அதேபோல் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா இம்முறை காங்கிரஸ் அணிக்கு தாவுமா? என்கிற ஊசலாட்டமும் இருக்கிறது.
பரபரக்கும் களம்
எப்படியாவது ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொள்வது என்கிற போராட்டத்துக்கு பாஜக தயாராகிவிட்டது. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் உற்சாகத்துடன் இழந்த ஆட்சியை பெற்றே தீருவது என்கிற வியூகத்துடன் காங்கிரஸ்-ஜே.எம்.எம். அணி முனைப்பு காட்டுகிறது.