எம்எல்ஏக்கள் பலம் எங்களுக்குத்தான்.. அதிக தொகுதியில் நாங்கள்தான்.. மணிப்பூரில் பாஜக-காங். பஞ்சாயத்த
மணிப்பூரில் 32 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவிடம் பாஜக உரிமை கோரியுள்ளது. அதே சமயம் பாஜகவைக் காட்டிலும் கூடுதல் தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் கட்சியும் ஆளுநரை சந்தித்துள்ள
இம்பால்: மணிப்பூரில் 21 தொகுதிகளில் வெற்றி வெற்ற பாஜக, சிறியக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. அதேபோல் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தங்களுக்கு முதலில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் அதற்கான முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியானது. இதில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் பெரும்பான்மை இல்லாததால் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் அங்குள்ள உதிரிக் கட்சிகளின் ஆதரவுடன் மாநிலத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைக்க போராடி வருகிறது.
அதேபோல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில், தலா 4 இடங்களில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஆதரவும், ஒரு இடத்தில் வெற்றி வெற்ற லோக் ஜனசக்தி கட்சியின் ஆதரவும், சுயேச்சை வேட்பாளர் ஆஷாப் உத்தீன், திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரோபிந்தரோ சிங் ஆகியோரின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து 21 இடங்களில் வென்ற பாஜக, மேற்கண்ட 11 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் மொத்தம் 32 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவிடம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
அதேபோல் முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸும் ஆளுநரை சந்தித்தது. அப்போது சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தங்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் இபோபி சிங் கோரிக்கை கடிதம் வழங்கியுள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் குழுவின் தலைவராக இபோபி சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தங்களை ஆ்ட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதேபோல் கோவாவிலும் தொங்கு சட்டசபை ஏற்பட்டு உதிரிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. எனினும் 15 நாள்களுக்கு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஆளுநர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.