முதல்வருக்கு நாங்க எங்க போறது.. இமாச்சலில் தலைமையை தேடும் பாஜக கட்சி!
இமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வருக்கான சரியான நபரை பாஜக தேடி வருகிறது.
சிம்லா: இமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமல் தோல்வி அடைந்ததை அடுத்து முதல்வருக்கான சரியான நபரை பாஜக தேடி வருகிறது. பாஜக கட்சி இங்கு அபாரம் வெற்றி அடைந்தும் தற்போது முதல்வருக்கு யாரை அறிவிப்பது என்று தெரியாமல் குழம்பி வருகிறது.
இமாச்சல பிரதேசத்தில் நடந்த மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் பாஜக 38 இடங்களில் வென்று உள்ளது. காங்கிரஸ் 18 இடங்களில் வென்று இருக்கிறது. மற்றவைகள் 3 இடத்தில் வென்று உள்ளது.
இந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து இருக்கிறது. காங்கிரஸ் இதனால் மோசமாக ஆட்சியை இழந்துள்ளது. ஆனால் பாஜக கட்சியின் முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமல் அவரது தொகுதியில் வெற்றியை பறிகொடுத்துள்ளார்.
இமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரேம் குமார் துமல், தான் போட்டியிட்ட சுஜான்பூர் தொகுதியில் மொத்தம் 12,836 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரஜிந்தர் ராணா 15,656 வாக்குகள் பெற்று உள்ளார். இதையடுத்து ரஜிந்தர் ராணா, பிரேம் குமாரை விட 2,820 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார்.
தற்போது பாஜக கட்சியில் முதல்வர் பதவிக்கு புதிய நபர் தேர்ந்தெடுக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பாஜக கட்சி தற்போது நான்கு வேட்பாளர்களை முதல்வருக்கான பட்டியலில் வைத்து இருக்கிறது.
அதன்படி ஜேபி நட்டா பாஜக கட்சியின் முதல் தேர்வாக உள்ளார். பிரேம் குமார் துமலின் மகனான அனுராக் தாக்குர் அதற்கு அடுத்து இருக்கிறார். மேலும் அணில் ஷர்மா, நரேந்திர தாக்குர் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளார்கள். இதனால் யாரை தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் பாஜக கட்சி குழப்பி வருகிறது.