வாஸ்து சரியில்லை.. ஆபீசை மாத்தணும்.. மீண்டும் பழைய அலுவலகத்திற்கு மூட்டையை கட்டிய பாஜக!
வாஸ்து பிரச்சனை காரணமாக, அலுவலக செயல்பாடுகளை மீண்டும் பழைய தலைமையகத்திற்கே பாஜக கட்சி மாற்ற இருக்கிறது.
டெல்லி: வாஸ்து பிரச்சனை காரணமாக, அலுவலக செயல்பாடுகளை மீண்டும் பழைய தலைமையகத்திற்கே பாஜக கட்சி மாற்ற இருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்காக மீண்டும் பழைய தலைமையகம் நோக்கி பாஜக செல்ல இருக்கிறது. பாஜக இப்போதுதான் புதிய தலைமையிடம் கட்டி இடம்மாறியது.
தற்போது வாஸ்து பிரச்சனை இருக்கிறது, தேர்தலில் தோற்கிறோம் என்று பல காரணங்களை சொல்லி மீண்டும் பழைய அலுவலகத்திற்கு செல்ல இருக்கிறது.
புதிய அலுவலகம்
டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாய் மார்க்கில் கடந்த பிப்ரவரி மாதம் பாஜக புதிய தலைமை அலுவலகம் கட்டியது. பல கோடி செலவில் கட்டப்பட்ட இந்த தலைமையகம்தான் உலகிலேயே ஒரு கட்சி பயன்படுத்தும் மிகப்பெரிய தலைமை அலுவலகம் ஆகும். சுமார் நான்கு மாடி கொண்ட இந்த தலைமையகம் மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
தொடர் சறுக்கல்
ஆனால் இந்த அலுவலகத்திற்கு மாறிய பின் பாஜக தொடர் சறுக்கலை சந்தித்து வருகிறது. தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறது. கர்நாடகாவில், பாஜக தோல்வியை தழுவி இருக்கிறது. தமிழகத்தில் பெரிய அளவில் கெட்ட பெயரை சம்பாதித்து இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இருக்கிறது. முக்கியமாக ராகுல் காந்தி பெரிய அளவில் புகழடைந்து இருக்கிறார்.
பழைய அலுவலகம்
இந்த நிலையில்தான் தற்போது பாஜக தனது அலுவல் செயல்பாடுகளை மீண்டும் பழைய தலைமையகத்திற்கே மாற்ற இருக்கிறது. அசோகா சாலையில் இருக்கும் பழைய பாரம்பரிய கட்டிடத்திற்கே தங்களது தலைமையகத்தை பாஜக கட்சி மாற்ற இருக்கிறது. ஆனால் சில பணிகள் மட்டுமே பழைய அலுவலகத்தில் செயல்படும்.
என்ன செய்வார்கள்
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை பாஜக இங்கிருந்தே செய்ய இருக்கிறது. அதன்படி இது பாஜக கட்சியின் வார் ரூமாக செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது பாஜக கட்சிக்கு வாஸ்து ரீதியாக இருந்த தடங்களை போக்கும் என்று அக்கட்சியினர் தெரிவித்து இருக்கிறார்கள்.