ராஜபக்சே அழைப்பு... தமிழக எதிர்ப்பை நிராகரித்தது பாஜக!
டெல்லி: மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைக்கக் கூடாது என்ற தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை பாரதிய ஜனதா கட்சி நிராகரித்துள்ளது.
இது குறித்து டெல்லியில் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
மோடி பிரதமராக பதவியேற்க உள்ள விழா, ஜனநாயகத்தின் மகிழ்ச்சியை கொண்டாடும் விழாவாக நடைபெறுகிறது. அந்த விழாவில் பங்கேற்பதற்காகதான் அண்டை நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதுவொரு வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியாகும். அண்டை நாடுகளுடனான நல்லுறவை வலுப்படுத்த வேண்டுமென்றதற்காக அந்நாட்டுத் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில், அவர்கள் நிச்சயம் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த அடிப்படையில்தான் ராஜபக்சேவுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இதை தமிழக கட்சிகள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
இதேபோல் பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்தேகர் கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அண்டை நாட்டுத் தலைவர்களுடன் நல்லுறவை கடைப்பிடித்து வந்தார். அதை தற்போது மோடி பின்பற்றுகிறார் என்றார்.
பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், நாட்டின் நலன் கருதி அண்டை நாடுகளின் நல்லுறவை இந்தியா வளர்த்து வருகிறது. அதனால்தான் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.