ராஜஸ்தானில் அரசு என்பதே இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.. ஆளுநரிடம் பாஜக பரபரப்பு மனு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சட்டசபை கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஒரு பக்கம் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து ஆளுநரை வலியுறுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சியான பாஜகவைச் சேர்ந்த குழு ஆளுநரை சந்தித்து மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி, அரசு என்பதே இல்லாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
சட்டசபையை விரைவில் கூட்ட வேண்டும் என்று அசோக் கெலாட் விடுத்த கோரிக்கையை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா இன்னும் ஏற்கவில்லை. இதையடுத்து நேற்று அசோக் கெலாட் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜ்பவனில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால் நான் எங்கே சென்று பாதுகாப்பு கேட்க முடியும்? சட்டம்-ஒழுங்கு நிலைமை சரி இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இதைப் பார்க்க முடியும் என்று காட்டமாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியா தலைமையில் 15 பேர் கொண்ட பாஜக குழு இன்று ஆளுநரை சந்தித்து ஒரு மனு அளித்துள்ளது.
ஆளுநரிடம் போராடியாச்சு.. பலனில்லை.. அடுத்து மோடி வீட்டுக்கு முன்பு தர்ணா.. அசோக் கெலாட் அதிரடி
அதில், அரசியல் சாசன நிறுவனங்களை அச்சுறுத்தும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டத்தின்போது கோஷம் எழுப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அரசு என்பதே இல்லாத சூழ்நிலையை காங்கிரசால் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனிடையே சட்டசபையை கூட்டுவதற்கு ஆளுநர் அழைப்பு விடுக்காவிட்டால், டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்துக்கு முன்பாக தர்ணா நடத்துவோம் என்று முதல்வர் அசோக் கெலாட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.