என்ன நடக்குது கர்நாடகாவில்... பதவியேற்பு தொடர்பான டுவிட்டை பாஜக டெலிட் செய்தது!
கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும்படி எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பாஜக டுவிட் செய்தது. அதை நீக்கியுள்ளது.
பெங்களூரு: கர்நாடகா முதல்வராக எடியூரப்பா நாளை காலை பதவியேற்பார் என்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியை, பாஜக நீக்கியுள்ளது.
கர்நாடகாவில் தேர்தலில் நடந்த குழப்பங்களால், யார் ஆட்சியை அமைப்பார்கள் என்பதில் பெரும் குழப்பம் இருந்தது.
இந்த நிலையில், ஆளுநரை பாஜக தலைவர்களும், காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்களும் இன்று சந்தித்து பேசினர். இன்று இரவுக்குள் ஆளுநர் தனது முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ சுரேஷ்குமார், முதல்வராக பதவியேற்கும்படி எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார் என்று டுவிட்டர் செய்தியை வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து கர்நாடக பாஜகவும் இதை உறுதி செய்யும் டுவிட்டர் செய்தியை வெளியிட்டது.
மேலும் வரும் 27ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் அவகாசம் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், இது தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்களை சுரேஷ்குமார், கர்நாடக பாஜகவும் நீக்கியுள்ளன.
அதனால், ஆளுநர் அழைப்பு விடுத்தாரா இல்லையா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.