விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து ஆலோசனை: தமிழிசை தகவல்
டெல்லி: தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே, தமிழக சட்டசபைத் தேர்தலிலும் பாமக, தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க பாஜக விரும்புகிறது. ஆனால், முன்கூட்டியே அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, தனித்துப் போட்டியிடுவதாக பாமக அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து பாஜகவின் கவனம் முழுவதும் தேமுதிக பக்கம் திரும்பியது. சட்டசபைத் தேர்தலில் தேமுதிக பாஜக அல்லது திமுகவுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் விஜயகாந்த்.
இந்நிலையில், தொடர்ந்து தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர். அங்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவைச் சந்தித்த தமிழிசை, தமிழக அரசியல் நிலவரம், பாஜக போட்டியிடும் தொகுதி பற்றிய அறிக்கையை அவரிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தமிழிசை, ‘தேர்தல் பணிகள் குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினோம். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்த தமிழக பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் மீண்டும் சென்னை வர உள்ளார். தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்பது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.