பொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் மோசமாக இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரபாகர் பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
Recommended Video
சென்னை: மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் மோசமாக இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரபாகர் பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த பொருளாதார சரிவு இப்போதே ஆட்டோமொபைல் துறையில் எதிரொலித்துள்ளது. இதனால் ஆட்டோமொபைல் துறையில் பலர் வேலையை இழந்து வருகிறார்கள். அதிலும் இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான சரிவை சந்தித்துள்ளது.
இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவிற்கு வெளியே இதை பற்றி பலர் பேசி வந்த நிலையில் தற்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரபாகர் இது தொடர்பாக பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார். அவர் இது தொடர்பாக தி இந்து நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார்.
என்ன கட்டுரை
பிரபாகர் தனது கட்டுரையில், இந்திய பொருளாதாரம் மோசமடைவது குறித்த அச்சம் வெளிப்படையாக தெரிய தொடங்கி உள்ளது. தற்போதைய அரசு அதை தொடர்ந்து மறுத்து வந்தாலும், பல துறைகள் நாளுக்கு நாள் மோசமான நிலையை அடைந்து வருகிறது. அரசு இந்த சவால்களை எதிர்ப்பதற்கு, எதிர்கொள்வதற்கு போதிய திட்டங்களை வைத்திருப்பது போலவும் தெரியவில்லை.
பாஜக எப்படி
பாஜக, தனக்கு என்று ஒரு பொருளாதார கொள்கைகளை உருவாக்காமல் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது. சமூக சோசலிச கொள்கை என்று நேருவின் வெற்றிகரமான பொருளாதார கொள்கையை மத்திய பாஜக அரசு புறந்தள்ளி உள்ளது. இதற்கு எதிராக வெற்றிகரமான பொருளாதார கொள்கையை பாஜக அறிவிக்கவில்லை. அரசியலை வைத்து நேருவை விமர்சிப்பதை மட்டுமே பாஜக செய்து வருகிறது.
காந்தி கொள்கை
காந்தியின் சோஷலிச கொள்கைகளையும் பாஜக பின்பற்றவில்லை. பாஜகவின் தற்போதைய நிதி கொள்கை எல்லாத்தையும் நிராகரிப்பதே பாஜகவின் வேலையாக இருக்கிறது. இது வேண்டாம், இது வேண்டாம் என்று அனைத்து நல்ல பொருளாதார கொள்கைகளையும் பாஜக நிராகரித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் பிரச்சனை குறித்து பாஜக எங்குமே விவாதிக்கவில்லை.
கொள்கை இல்லை
1998ல் இருந்தே பாஜக பெரிய அளவில் பொருளாதாரம் சார்ந்து யோசிக்கவில்லை. 2004ல் பாஜக பொருளாதார திட்டங்களை அறிவித்து தேர்தலில் நின்றது. அப்போது தோல்வி அடைந்தது. அதனால் தற்போது பொருளாதார திட்டங்களை விட்டுவிட்டு, வலிமை சார்ந்த அரசியல், தேசியம், பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளை கையில் எடுத்துள்ளது.
மன்மோகன் சிங்
பி வி நரசிம்ம ராவ் போன்று, அவருக்கு அடுத்து மன்மோகன் சிங் போலும் யாரும் இப்போது பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வர முடியாது. அவர்களை யாராலும் சேலஞ் செய்ய முடியாது. அவர்களின் பொருளாதார சீர்த்திருத்த கொள்கைகள் இப்போதும் சிறந்ததாக திகழ்கிறது .
பொருளாதாரம் மோசம்
ஆனால் அதை பற்றி கவனிக்காமல் தொடர்ந்து பாஜக நேருவை மட்டும் விமர்சனம் செய்கிறது. அதுவும் அரசியல் ரீதியான தாக்குதல்தான் தவிர பொருளாதார ரீதியானது கிடையாது. மிக தீவிரமாக உடனடியாக பொருளாதார கொள்கைகளை பாஜக அரசு வகுக்க வேண்டும். அதைவிட்டு டிவியில் பாஜகவினர் சத்தமாக விவாதம் செய்கிறார், வாட்ஸ் ஆப் பார்வேர்ட் மெசேஜ்களை அனுப்பி வருகிறார்கள், என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.