ஆர்.டி.ஐ. ஆர்வலர் படுகொலை வழக்கில் பாஜக மாஜி எம்.பி. டினு சோலங்கிக்கு ஆயுள் தண்டனை
அகமதாபாத்: தகவல் அறியும் உரிமை ( ஆர்.டி.ஐ) ஆர்வலர் அமித் ஜேத்வா சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜகவின் முன்னாள் எம்.பி. டினு சோலங்கிக்கு சிபிசி சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனனை விதித்துள்ளது.
குஜராத்தின் ஜூனாகத் லோக்சபா தொகுதி எம்.பி.யாக இருந்தவர் டினு சோலங்கி. ஜூனாகத் அருகே உள்ள கிர் சிங்கங்கள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலில் டினு சோலங்கி ஈடுபட்டதை அம்பலப்படுத்தினார் ஆர்.டி.ஐ. ஆர்வரலர் அமித் ஜேத்வா.
இது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்திலும் அமித் ஜேத்வா வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு வெளியே 2010-ம் ஆண்டு ஜூலை 20-ந் தேதி அமித் ஜேத்வா, மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இப்படுகொலை குறித்து விசாரணை நடத்திய குஜராத் போலீசார், டினு சோலங்கிக்கு எந்த தொடர்புமே இல்லை என கூறியது. இதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
மோடிக்கு எதிராக பேசும் வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்ய கூடாது- சசிகலா புஷ்பா தடாலடி மனு
இதை அகமதாபாத் சிபிஐ நீதிமன்றம் விசாரித்தது. இவ்வழக்கில் 2016-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் டினு சோலங்கி உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.எம்.தாவே கடந்த 7-ந் தேதி தீர்ப்பளித்தார். அதில் டினு சோலங்கி உள்ளிட்ட 7 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கில் இன்று தண்டனை விவரங்களை நீதிபதி தாவே அறிவித்தார்.
அதில் டினு சோலங்கி உள்ளிட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி தாவே தெரிவித்தார்.