‘சுயேட்சை’ வேட்பாளர் ஜஸ்வந்த் சிங் பாஜகவிலிருந்து அதிரடி நீக்கம்
ஜெய்ப்பூர்: கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையாக பாஜக கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப் பட்டுள்ளார் அக்கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங்.
நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் தொகுதியை தனக்கு ஒதுக்க வேண்டினார் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த்சிங். ஆனால், அவருக்கு அத்தொகுதி ஒதுக்கப் படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஜஸ்வந்த் சிங், தான் விரும்பிய தொகுதியிலேயே சுயேட்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். ஜஸ்வந்த் சிங்கை சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டனர். ஆனால், அது பலிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட ஜஸ்வந்த் சிங் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடத்தை ராஜஸ்தான் மாநில பா.ஜனதா கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக அம்மாநில பா.ஜனதா தலைவர் அசோக்பர்னாமி கூறுகையில், ‘கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு அனைத்து போட்டி வேட்பாளர்களுக்கும் நோட்டீசு வழங்கும். அவர்கள் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படலாம்'' எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று இரவு ஜஸ்வந்த்சிங் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பா.ஜனதா மேலிடம் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2009ம் ஆண்டு தனது புத்தகத்தில் ‘முகமது அலி ஜின்னா'வைப் புகழ்ந்ததற்காக பாஜகவில் இருந்து நீக்கப் பட்டார் ஜஸ்வந்த் சிங். பின்னர் மீண்டும் சேர்த்துக் கொள்ளப் பட்டார். தற்போது இரண்டாவது முறையாக கட்சியிலிருந்து நீக்கப் பட்டுள்ள ஜஸ்வந்த் சிங், இம்முறை ஆறு ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து விலக்கி வைக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.