பாஜகவுக்கு எதிரான ஜிகாத்.. மமதா பிரகடனத்தால் மே.வங்கத்தில் தாக்குதல் வன்முறை அச்சம்- கடும் கண்டனம்
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் பாஜகவுக்கு எதிரான ஜிகாத் முழக்கத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவினர் மீதான வன்முறைகளை கட்டவிழ்த்துவிடவே மமதா இந்த முழகத்தை எழுப்பியுள்ளார் என்கிறது அக்கட்சி.
மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மமதா பானர்ஜியின் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் பேசிய மமதா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் ஆண்டுதோறும் கடைபிடிக்கும் மாவீரர் தினம்- தியாகிகள் தினம் ஜூலை 21-ல் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் மாவீரர் நாள்- தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படவில்லை. இந்த ஆண்டு ஜூலை 21-ல் நடைபெறும் தியாகிகள் தின கூட்டங்களில் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.
நம்முடைய தியாகிகள் தினத்தில் பாஜகவுக்கு எதிரான ஜிகாத்தை நாம் பிரகடனப்படுத்துவோம்; மேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்த உறுதியேற்போம் என கூறியிருந்தார். மமதாவின் பாஜகவுக்கு எதிரான ஜிகாத் முழக்கத்துக்கு அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சியை விட..மே.வங்கத்தில் ஆளுநருக்கு இனி பல்கலைக் கழக வேந்தர் பதவியே கிடையாது-மமதா அதிரடி!
பாஜகவின் ஐடி விங் பொறுப்பாளர் அமித் மாளவியா கூறுகையில், ஜூலை 21-ல் பாஜகவுக்கு எதிரான ஜிகாத்தை மமதா பானர்ஜி பிரகடனப்படுத்துவோம் என்கிறார். அதாவது மேற்கு வங்க மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட போகிறார் மமதா பானர்ஜி. மாற்று கருத்துகள் கொண்டோருக்கு எதிரான தாக்குதலுக்குதான் இந்த முழக்கம் என கூறியுள்ளார்.
முன்னதாக ஆல்ட் நியூஸ் முகமது ஜுபைர், குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதாவல்ட் கைதை கடுமையாக கண்டித்திருந்த மமதா பானர்ஜி, உங்கள் கட்சியினர் அவதூறு பரப்பும் போதும் வன்முறையில் ஈடுபடும் போதும் அமைதி காத்தவர்கள் நீங்கள்.. இப்போது ஏன் ஜூபைரை கைது செய்கிறீர்கள்? இப்போது ஏன் டீஸ்டாவை கைது செய்கிறீர்கள்? உங்கள் நடவடிக்கையை உலகமே கண்டித்து கொண்டிருக்கிறது என்றார்.