பாஜகவின் 'தெனாவெட்டு' அரசியலுக்கு கை கொடுக்கிறதா (தூங்கும்) தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்குகள்?
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்குகளில் தீர்ப்பு வராததே பெரும்பான்மை இல்லாத பாஜக கர்நாடகவில் ஆட்சி அமைப்போம் எனக் கூற காரணம்.
Recommended Video
பெங்களூரு: கர்நாடகா தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத போதும் ஆட்சி அமைப்போம் என பாஜக தெனாவெட்டு காட்டுவதற்கு காரணமே நீதிமன்றங்களில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்குகள் தூங்கிக் கொண்டிருப்பதுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கர்நாடகா தேர்தலில் பாஜக 104 இடங்களில்தான் வென்றுள்ளது, பெரும்பான்மைக்கு தேவை 112 எம்.எல்.ஏக்கள். அதேநேரத்தில் காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி 115 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கிறது. அதனால் ஆட்சி அமைக்க உரிமை கோருகின்றன.
எந்த கட்சி ஆட்சி அமைப்பது என்பதை ஆளுநர் முடிவு செய்வார் என்பது மரபு. ஆனால் கோவாவிலும் மணிப்பூரிலும் அதிக இடங்களை வென்ற காங்கிரஸை அம்மாநில ஆளுநர்கள் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.
பாஜக ஆட்சி
ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏக்களே இல்லாத பாஜகவைத்தான் அழைத்தார்கள் ஆளுநர்கள். மேகாலயாவில் 21 இடங்களில் காங்கிரஸ் வென்றது. ஆனால் 2 இடங்களில் மட்டுமே வென்ற பாஜக இதர கட்சிகளை இணணத்துக் கொண்டு ஆட்சி அமைத்தது.
இதுதான் காரணம்
இப்போது கர்நாடகாவிலும் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஆட்சி அமைப்போம் என்கிறது பாஜக. இந்த தெனாவெட்டு அரசியலுக்கு காரணமே எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்குகளில் தெளிவான தீர்ப்பு வழங்கப்படாமல் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
குதிரைபேரம்
காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கித்தான் பாஜக ஆட்சி அமைக்க முடியும் என்பது பட்டவர்த்தனமான உண்மை. ஒருவேளை ஜேடிஎஸ் - காங்கிரஸ் அரசு அமைந்தால் சில எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பெரும்பான்மை கிடைக்காத வகையில் செய்வது என்பதும் பாஜகவின் திட்டம்.
அதிகபட்சம் தகுதி நீக்கம்
இப்படி ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறோமே என்கிற கூச்ச நாச்சமே இல்லாத படுகொலையை செய்ய களமிறங்கியுள்ளது பாஜக. அப்படி சில எம்.எல்.ஏக்கள், பாஜகவிடம் விலை போனால் அதிகபட்சம் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் அல்லது கொறடா உத்தரவை மீறினார்கள் என்பதற்காக தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
ஆகட்டும் பார்க்கலாம்
இதில் எது நடந்தாலும் நீதிமன்றத்தில் வழக்குகளைப் போட்டு காலத்தை கடத்திவிடலாம். ஏனெனில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்குகள் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் சபாநாயகருக்கான அதிகாரம் போன்ற பல வழக்குகள் இன்னும் தீர்ப்பளிக்கப்படாமல் நீதிமன்றங்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வழக்குகளோடு இந்த வழக்கும் தூங்கும்..அதற்குள் நாம் நினைத்ததை சாதித்துவிடலாம் என்கிற தைரியத்தில்தான் பாஜக இப்படியான மரபற்ற, ஜனநாயக விரோத செயல்களில் இறங்குகிறது என்பதே அரசியல் பார்வையாளர்கள் குற்றச்சாட்டு.