உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு தோல்வியை பரிசாக தந்த 'மேல்ஜாதி' அரசியல்
உத்தரப்பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தும் மேல்ஜாதி அரசியலே இடைத் தேர்தல்களில் தோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது.
Recommended Video
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் மவுரியா ஆகியோர் போட்டியிட்டு வென்ற லோக்சபா தொகுதிகளின் இடைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியைத் தழுவியிருப்பது அக்கட்சியினரால் ஜீரணிக்க முடியவில்லை. உ.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய கையோடு 'தலையெடுத்த' மேல் ஜாதி அரசியல்தான் இந்த மரண அடிக்கு காரணம் என கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்ற 100 நாட்கள் தொடர்பாக ஆங்கில ஊடகங்கள் சிறப்பு கட்டுரைகளை கடந்த ஆண்டு எழுதியிருந்தன. அதன் தலைப்புகளில் ஒன்று "பாஜகவுக்கு சவால் விடும் உ.பி. அரசில் மீண்டும் தலைதூக்கும் மேல்ஜாதி ஆதிக்கம்" என்பதுதான்.
உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை பண்டிட்டுகள், தாகூர்கள், பிராமணர்கள், கயஸ்தா, காத்ரி, பூமிகார் மேல்ஜாதியினராக கருதுகின்றனர். யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் 5 முக்கிய அமைச்சர்களில் 4 பேர் மேல்ஜாதியினர்தான்.
முக்கிய அமைச்சர்கள்
அதுமட்டுமல்ல மேலே சொன்ன மேல்ஜாதியினர் 25 பேர் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். 46 அமைச்சர்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் 15 பேர்; தாழ்த்தப்பட்டோர் 4; சீக்கியர்-1; முஸ்லிம்- 1; யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைந்த உடன் மேல்ஜாதி தாகூர்களுக்குதான் நிர்வாகத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
தாகூர்களின் அரசு
தலித்துகளுக்கும் தாகூர்களுக்கும் மோதல் ஏற்பட்டால் உ.பி.அரசு நிர்வாகம் தாகூர்களைத் தாங்கிப் பிடிக்கிறது. அம்மாநிலத்தின் 75 மாவட்ட எஸ்பிக்களில் 13 பேர் தாகூர்கள்; 20 பேர் பிராமணர்கள் என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. 2 யாதவர்கள், 2 முஸ்லிம்களை உள்ளடக்கி 21 ஓபிசி எஸ்பிக்களும் அடக்கம்.
பொற்காலமாக கொண்டாடும் தாக்கூர்கள்
யோகி ஆட்சியை 'தங்களது பொற்காலம்' திரும்பிவிட்டதாக கொண்டாடி வருகின்றனர் தாகூர்கள். இந்த மேல்ஜாதிய ஆதிக்கம் இதர பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களை இயல்பாகவே அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.
இது தாக்கூர்களின் அரசு
லோக்சபா தேர்தலில், சட்டசபை தேர்தலில் இந்த இதர பிற்படுத்தப்பட்ட, தலித்துகளின் வாக்குகளை அறுவடை செய்தது பாஜக. ஆனால் அப்போது அந்த சமூகத்தினர் அமையப் போவது தாகூர்களுக்கான அரசு என்பதை அப்போது உணரவில்லை.
பகுஜன் சமாஜ் கூட்டணி
இப்போது அப்பட்டமாக இது தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிரான அரசாக விஸ்வரூபமெடுத்து நிற்பதை உணர்ந்துவிட்டார்கள். இதனால்தான் பரம வைரிகளான சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இயல்பான கூட்டணியாக உருவெடுத்திருக்கிறார்கள். ஆம் லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் பரந்துபட்ட இந்து வாக்கு வங்கியை உருவாக்கிய பாஜக அதைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை. தங்களை நோக்கி வந்த இந்து வாக்கு வங்கியை மேல்ஜாதி ஆதிக்க அணுகுமுறையால் பாஜகவே தகர்த்துவிட்டு இப்போது கூப்பாடு போடுகிறது என்பதே நிதர்சனம்.